Tuesday, July 28, 2009

புத்திசாலி புள்ள...

(கடந்த மாத நர்கிஸ் மாத இதழில் வெளியான என்னுடைய இஸ்லாமிய சிறுகதை; நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, என் வாழ்வில் நடந்ததும் கூட)

“சுமையா! இப்படியே கவலைப்பட்டுக்கிட்டு உட்கார்ந்திருந்தா எப்படி? அத்தா சொன்னா சொன்னது தான்னு உனக்கு தெரியாதா?” ஆதுரத்தோடு, தன் மகளைப் பார்த்து சொன்னார் கதீஜா.


“அம்மா, இந்நேரம், என்னோட பரிச்சை பேப்பரெல்லாம் கொடுத்திருப்பாங்கம்மா. ரசினாவை விட அதிகமா மார்க் வாங்கணும்னு ராவெல்லாம் உட்கார்ந்து படிச்சது உனக்கு தெரியாதாமா?”


“அதான் நான் அப்பவே கிடந்து அடிச்சிக்கிட்டேன். வயசுக்கு வந்திட்டா, உங்கத்தா படிக்க அனுப்ப மாட்டாங்க. அதனால, ரொம்ப படிக்காத; ஏதோ பாசானா போதும்னு. நீ தான் கேக்கல. இப்ப விசனப்பட்டுக்கிட்டு இருந்து என்ன பிரயோசனம்?!”


ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுமையா, தன் படிப்புக்கு இப்படி ஒரு இடைஞ்சல் வரும்னு நினைத்தே பார்க்கவில்லை. தன் வகுப்பு தோழி, ரசினாவோடு, எப்போதும் போட்டி போட்டு படிப்பவளுக்கு அரை பரிச்சையின் மார்க்கைக்கூட பார்க்க முடியாமல் இது என்ன சோதனை என்று எண்ணி வருந்தினாள்.


பரிச்சை லீவில் அவள் வயதுக்கு வந்ததும், அவள் தந்தை, இனி பள்ளி செல்ல வேண்டாம் என்று சொன்ன போது, ஏதோ விளையாட்டுக்குத் தான் சொல்கிறார் என்று நினைத்தாள்.


அவள் தந்தை தீனில் மிகவும் பற்றுள்ளவர். துன்யாவை விட தீனை மிகவும் நேசிப்பவர். பெண்பிள்ளைகள் வயது வரும் வரை படித்தால் போதும்; அதன் பின்னர், துன்யாவுடைய கல்வி, அவர்களுக்குத் தேவையில்லை என்ற எண்ணம் அவர் ரத்தத்தில் ஊறிய ஒன்று. அந்த நினைப்பில் தான், ஏதோ ஏழாவது, எட்டாவது வரை தானே படிக்க வைக்கப் போகிறோம், அதற்குள் ஓரளவுக்குக் கற்றுக் கொள்ளட்டுமே என்று இங்கிலிஷ் மீடியத்தில் சேர்த்து படிக்க வைத்தார்.


“அத்தா! பள்ளிக்கூடம் போறன்த்தா”


“வேண்டாம்! வேண்டாம்! நான் எங்கயும் பர்தா போடாம அனுப்ப மாட்டேன் உன்னைய. அதுமில்லாம, ஸ்கூலுக்குப் போனா லுஹரு களாவாயிரும்! வீட்டுலயே இருந்து அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணிக்கிட்டு இரு!”


“அத்தா! நான் பர்தா போட்டுக்கிட்டு கேம்பஸுக்குள்ள போய் கழட்டிக்கிறேன்த்தா! எங்க ஸ்கூல் கேர்ள்ஸ் ஸ்கூல் தான! ஜென்ஸ் யாரையும் உள்ளே விட மாட்டாங்கன்னு உங்களுக்கு தெரியாதா அத்தா?! அப்புறம், லன்ச் டைம்ல லுஹரும் தொழுதுக்குவேன்; அதுமில்லாம, நான் தொழுகறத பார்த்தா, இன்னும் நிறைய முஸ்லிம் பிள்ளைங்களும் கூட தொழுவாங்க! ப்ளீஸ் அத்தா!”


“அதெல்லாம் நடக்கற காரியம் இல்ல சுமையா!”


“அத்தா போரடிக்கும்த்தா!”


“போரடிச்சா குர்ஆன் ஓது! வீட்டு வேலைங்க எல்லாம் பழகிக்க! நல்ல மாப்பிள்ளை வந்தா கட்டிக் கொடுத்திருவோம். வேலை பழகினாத்தான் போற பக்கம் நல்ல பேரு வாங்க முடியும்”


அதுக்கும் மேல எதுவுமே பேசல சுமையா. கல்யாணம் என்பதை அவளால நினைத்துக் கூட பார்க்க முடியல. யா அல்லாஹ்! என்னை இப்படி சோதிக்கிறியே? மனசுக்குள்ளயே அழுது கொண்டிருந்தாள்.


அன்றிரவு, அவங்கத்தா கூப்பிட்டாங்க,


“சுமையா! தஃலிம் படிக்கலாம் வா”


தொழுகையின் சிறப்பு என்ற பிரிவில், பர்ளான, சுன்னத்தான மற்றும் நஃபிலான தொழுகையைப் பற்றிய ஒரு ஹதீஸைப் படித்தவர், அதை விளக்கமாக சொல்ல ஆரம்பித்தார்,


“பர்ளு தொழுகையில் ஏற்படும் குறைகள், சுன்னத்தான நஃபிலான தொழுகைகள் மூலம் நிவர்த்தி ஆகிவிடும். தஹஜ்ஜத், இஷ்ராக், லுஹா மற்றும் அவ்வாபீன் ஆகியவை நஃபிலான தொழுகைகள். தஹஜ்ஜத் தொழுதால், இறைவன் ஏழாம் வானிலிருந்து முதலாம் வானத்துக்கு இறங்கி வந்து, நாம் கேட்பதை செவிசாய்க்கிறான். இஷ்ராக் தொழுவதால், நம்முடைய நாட்டங்கள் எல்லாம் நிறைவேறுகிறது. லுஹா தொழுவதால், இரண விஸ்தீரணம் ஏற்படுகிறது. அவ்வாபீன் தொழுவதால், கடல் நுரையளவுக்கு பாவங்கள் இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றது! இன்ஷா அல்லாஹ், நாம் எல்லாரும் முடிஞ்ச அளவுக்கு நபிலான தொழுகைகளை தொழுக வேண்டும்”


கப்பாரா ஓதி, தன்னுரையை முடித்துக் கொண்டார் தந்தை.


ஒரு வாரம் சென்றது. சுமையா வீட்டில் இருந்தாலும், மனசெல்லாம் வகுப்பறையில் தான். பள்ளிக்கூடம் போகாவிட்டாலும், புத்தகத்தை எல்லாம் தூக்கிப் போட்டுவிடாமல், தினமும் ஆர்வமாக உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பாள். அதைப் பார்த்தாவது தந்தை மனம் மாற மாட்டாரா என்ற நப்பாசை அவளுக்கு.


தினமும் மகள், இஷ்ராக் தொழுவதை கவனித்த தந்தைக்கு, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பரவாயில்லை, நாம சொன்னதை அப்படியே பிடித்துக் கொண்டாள் என்ற சந்தோஷம். அதை மகளிடம் கேட்கவும் செய்தார்.


“சுமையா! பரவாயில்லையே, தினமும் இஷ்ராக் தொழுதுக்கிறியே!”


“ஆமாம் அத்தா! நீங்க தான சொன்னிங்க இஷ்ராக் தொழுதா நம்ம நாட்டம் நிறைவேறும்னு”


“ஆமாம்மா! அதில சந்தேகமே வேண்டாம். நாம நாடியதைக் கொடுக்க அல்லாஹ் போதுமானவன்”


“அதனால தான் அத்தா! தினமும் நான் இஷ்ராக் தொழுது, மறுபடியும் பள்ளிக் கூடம் போக வேண்டும்னு துவா செய்யுறேன்! அல்லாஹ் என்னோட நாட்டத்தை நிறைவேற்றுவானா அத்தா?!”


“புத்திசாலுப் புள்ள! என்னையே மடக்கிட்டயே? நாளையில இருந்து நீ பள்ளிக்கூடம் போமா!”


சுமையாவுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் பெருகியது. மகிழ்ச்சியோடு உள்ளே ஓடினாள், சஜ்தாவில் விழுந்து இறைவனுக்கு நன்றி செலுத்த!


-சுமஜ்லா.

.

.

23 comments:

Jaleela Kamal said...

சுஹைனா நானும் முடிந்த போது தஹஜ்ஜத்,இஷ்ராக், அவ்வாபின்,தொழுகைகளை வழமையாக தொழுது வருகிறேன்.
ந‌பில் தொழுகைக‌ளும் தொழுவேன்.


என் பிளாக்கில் முத்தான‌ தூஆக்க‌ளில் அவ்வாபின் தொழுகை ப‌ற்றி போட்டு உள்ளேன் பாருங்க‌ள்.


www.jaleela-duwa.blogspot.com

நட்புடன் ஜமால் said...

நர்கீஸ் இதழலில் வந்தமைக்கு வாழ்த்துகள்.


பிரார்த்தனையின் சக்தியே அபாரம் தான்.

அதிரை அபூபக்கர் said...

முதலில்.. உங்களது கட்டுரை நர்கீஸ்-ல் வந்தமைக்கு வாழ்த்துகள்.. அப்புறம்.. நபிலான தொழுகையின் சிறப்பைப்பற்றி சொல்லியுள்ளீர்கள்...

S.A. நவாஸுதீன் said...

நர்கீஸ் இதழில் கதை வந்தமைக்கு பாராட்டுக்கள். நபிலான தொழுகையின் சிறப்பைப்பற்றி நல்ல மெசேஜ் இருப்பது சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி

நையாண்டி நைனா said...

Sister,
mika arumai.
Vaalthukkal.

Vidhoosh said...

ஏனோ படித்து முடிக்கும் போது கண் கலங்கி விட்டன. ஆனந்தமாக இருக்கிறது..
வாழ்க.

Noor Mohamed said...

நன்றாக உள்ளது.

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்து சொன்ன எல்லா சகோதர சகோதரிகளுக்கும் நன்றி!

Jaleela Kamal said...

அழகாக நபில் தொழுகையை சிறிய கதையின் மூலம் விளக்கிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.
மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
மேலே பதிவில் காபி பேஸ்ட் பண்ணும் போது இது பதிவாகல இப்ப தான் மறுபடி பார்த்தேன்.
இப்போது கூட‌ சிலர் வயது வந்த பிள்ளைக்கு எதுக்கு படிப்பு என்று நிருத்திவிடுகிறார்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர் கதை

Menaga Sathia said...

நர்கீஸ் இதழலில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் சுகைனா,கதை அருமை!!

NIZAMUDEEN said...

பொழுதுபோக்கு கதைகளிடையே இதுபோல்
தீனின் சிறப்புக்களை, நபில் தொழுகையின்
சிறப்புக்களைக் கொண்டு கருத்துக் கதை
எழுதியது மிகச் சிறப்பு.

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா, படிப்புக்காக நான் போராடியது, இன்று நினைத்தாலும் எனக்கு உள்ளம் நடுங்கும். ஒரு குருத்தின் வளர்ச்சியை கிள்ளிப் போட யாருக்கும் உரிமையில்லை. என்னை நன்கு ஊக்கம் தந்து படிக்க வைத்திருந்தால், நான் எங்கோ இருப்பேன்!

SUMAZLA/சுமஜ்லா said...

மாற்று மதத்தினராய் இருந்தும் வாழ்த்துத் தந்த ஸ்டார்ஜானுக்கும் மேனகாவுக்கும் மனமார்ந்த நன்றிகள். நம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, நான் குறிப்பிட்டது போல, இது என் வாழ்வில் 100% அப்படியே நடந்த சம்பவம்(இஷ்ராக் தொழுதது உட்பட). அதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

அரங்கப்பெருமாள் said...

இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

"எவர் வேதத்தை உறுதியாக பற்றிக் கொண்டு,தொழுகையயும் நிலை நிறுத்துகிறார்களோ,அத்தகையோரின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்" (7:170)

SUMAZLA/சுமஜ்லா said...

ஆஹா! பெருமாள் அண்ணா, உங்களிடமிருந்து திருக் குர்ஆனின் வரிகளை கேட்க மெய்சிலிர்க்கிறது. கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது. தங்களைப் போன்றவர்களால் தான் நம் நாட்டில் சகோதரத்துவம் தழைத்தோங்குகிறது. மிக்க நன்றி!

(கிட்டத்தட்ட நர்கீஸில் வெளிவந்த ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் மிகுந்த தயக்கத்தோடு தான் இதை வெளியிட்டேன். என்னை உற்சாகப்படுத்திய யாவருக்கும் கோடி நன்றிகள்!)

அரங்கப்பெருமாள் said...

சகோதரி மிக்க மகிழ்ச்சி. செய்திக்காக சொல்கிறேன். திருக்குரானை படிக்க வேண்டும் என்ற ஆவலில், அந்நூலை வாங்கினேன். அங்கு பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்து படிப்பதற்கு திறந்தால்,எனக்கு ஒரே கோபமாக வந்தது. ஒரு பக்தி நூலில் இப்பிடி ஒரு தவறா என எண்ணியவாறு வாங்கிய இடத்தில் சென்று கேட்கிறேன். அவர் சிரித்துக் கொண்டே இவ்வாறு கூறினார். என்னங்க விவரம் தெரியாதா,உருது மொழி வலது பக்கத்திலிருந்து இடப்பக்கம்தானே எழுதுவாங்க. குரான் அப்பிடித்தான் இருக்கும். அதான் தமிழ் மொழி பெயர்ப்பா இருந்தாலும் அப்பிடியே இருக்கு.
பிறகுதான் மண்டையில் உரைத்தது. குரானை கடைசிப் பக்கத்திலிருந்து படிக்க வேண்டும்(எனனைப் போல புரியாதவர்களுக்கு).

பி.கு: விடுகதை புலிகள் - பதிவுக்கு நான் ஏன் அப்பிடி பின்னூட்டம் எழுதினேன்னு இப்ப புரியுதா(நாம எப்பவும் உண்மைதான் பேசுவோம்)

Jaleela Kamal said...

பெருமாள் சார் ரொம்ப‌ ஆச்ச‌ரிய‌மா இருக்கு அத்தியாத்தோடு சொல்லி இருக்கீங்க‌.ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.

SUMAZLA/சுமஜ்லா said...

பெருமாள் சார், இன்று காலை வேளையிலேயே என்னை வாய்விட்டு சிரிக்க வைத்து விட்டீர்கள்.

குர்ஆன் உள்ளது உருது மொழி அல்ல; அரபி மொழி! ஆனால், எழுத்துக்கள் ஒன்று போலவே இருக்கும். மற்றபடி வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. உருதும், ஹிந்தியும் ஏறக்குறைய ஒன்று தான், எழுத்துக்களைத் தவிர!

நீங்கள் பின்குறிப்பின் போட்டிருந்த உண்மையை, என்னவோ ஏதோவென்று போய், விடுகதை புலிகளில் பார்த்தால், ஹா ஹா ஹா!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஸ்டார்ஜன் ( ஜான் அல்ல )என்பது புனைப் பெயர் .

என்னுடைய பெயர் சேக் மைதீன் .


பாராட்டுவதற்கு மதம் பொருட்டல்ல...

SUMAZLA/சுமஜ்லா said...

//பாராட்டுவதற்கு மதம் பொருட்டல்ல...//

சரியாக சொன்னீர்கள். நான் உண்மையில் ‘ஜான்’ என்றும் க்ரிஸ்டியன் என்றும் நினைத்திருந்தேன். மன்னிக்கவும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

It's ok