Sunday, September 27, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 23

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

ஓட்டுவளியும் தாழ்வான முற்றமும் உள்ள வீடு அது, பெரிய வாசல் முன்புறம் இருக்கும். முற்றத்தை தாண்டினால், உள்ளறை. இது போல வரிசையாக மூன்று அறைகள். இதில் தான் எல்லாரும் படுத்து தூங்குவார்கள். மற்றபடி, பாத்ரூம் போகணும் என்றாலும், வெளியே தான் வர வேண்டும்.

ஆண்கள் யாரும் இல்லாத வீடு. இரவில் வெளியே யாரோ நடப்பது போல சத்தம். மர்ஜியா முதலில் எந்திருச்சு, எல்லாரையும் எழுப்ப, அமைதியான சூழ்நிலையில் பயம் கவ்விக் கொண்டது.

வந்திருப்பது திருடன் என்று புரிந்தது. ஓட்டை பிரித்து இறங்கி விடுவானோ என்ற அச்சம் ஆழ்மனதில்...

“பூனை உருட்டுதும்மா” வந்திருப்பது திருடன் என்று தாம் உணர்ந்ததை காட்டிக் கொள்ளக்கூடாது என்று சற்று உரக்கவே சொன்னாள் ஆப்பி.

“ஏய், ரெண்டு கால் பூனடீ” அந்த சூழ்நிலையிலும் ஜோக் அடித்தாள் மர்ஜியா....

சிறிது நேரம் திண்ணையிலேயே நடந்து கொண்டிருந்தான் வந்தவன். யாராவது வெளியே வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு...

பாஜிலா வளர்த்து கொண்டிருந்த புஸ்ஸி பூனை விடாமல் கத்திக் கொண்டிருந்தது.

“தர்காவுக்கு போயிருந்த 30 பேர் வேன்ல இப்ப வந்திருவாங்கல்ல?”

இதைக் கேட்டு பயந்து அவன் போய் விடமாட்டானா என்ற எண்ணம் பாத்திமாவுக்கு.
ஒரு வழியாக அவனுடைய சத்தம் நின்றது. விடிந்த பிறகு வெளியே வந்து பார்த்தால், காலடி தடங்கள்.

ரொம்பவும் அச்சமாக இருந்தது.

இப்படிபட்ட சூழ்நிலையில் வீட்டில் ஒரு ஆண்மகன் கூட இல்லையே என்ற கவலை பாத்திமாவுக்கு. மீரான் சாயபு மகனைப் போல வளர்த்த ஜாயிர், அவர் மரணத்துக்கு பின்பு, இங்கு அதிகமாக வருவதில்லை. அதற்கு காரணம், மீரான் சாயபு அளவுக்கு பாத்திமாவுக்கு அவன் மேல் அதிகம் பிடிப்பு இல்லை. அதோடு, அவன் உறவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக போய்விட்டான்.

அடுத்த நாள் இரவானதும், அறையில், கம்பு, கத்தி, அருவாள், உலக்கை, மிளகாய் பொடி எல்லாம் எடுத்து அருகில் வைத்துக் கொண்டனர். தினமும் அதை எல்லாம் அருகில் வைத்துக் கொண்டு தூங்குவது வழக்கமாகிப் போனது.

இதற்கு ஓரளவுக்காவது தீர்வு காண வேண்டும் என்று வாசலில் சிமெண்ட் அட்டை போட்டு கொஞ்சம் பந்தோபஸ்து செய்தார் பாத்திமா. அந்த நேரத்தில், எடுப்பு கக்கூஸுக்கு மாற்றாக செப்டிக் டேங்க் கட்ட வேண்டியிருந்தது. அதோடு இந்த பணியும் சேர்த்து செய்ததில், கையில் இருந்த சேமிப்பெல்லாம் கரைந்து விட்டிருந்தது.

“மர்ஜி, ஆப்பி, பாருங்க.... இப்ப என் கையில காசில்ல... அதனால, உங்கப்பா வந்தா, அவர்கிட்ட சொல்லி, எப்படியாவது பணம் கட்டி காலேஜில் சேர்த்து விட சொல்லிருங்க!”

அதே போல, தஸ்தகீரும் காலேஜில் சேர்க்க பணம் தந்தார்.

இருவரும் ஒரே வகுப்பில் ஒன்றாகவே படித்து வந்தது, காலேஜ் போக வர சவுகரியமாக இருந்தது.

நல்லபடியாக படித்து வந்தார்கள்.

அப்போ, பாஜிலா பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். அவள் பெரிய மனுஷி ஆகவில்லை என்று பாத்திமா ரொம்பவும் கவலைப்பட்டு கொண்டிருக்க, தான் வயது வந்தும் ஆறு மாதமாக மறைத்து வந்ததை, மர்ஜியா கண்டுபிடித்து அம்மாவிடம் சொல்லி விட்டாள்.

அதிலிருந்து, பாஜிலாவுக்கு மர்ஜியின் மேல் ஒரு காழ்ப்புணர்வு. ஒரு விதமான வெறுப்பு அடுத்த வருடம் இன்னும் அதிகமானது. அதற்கு காரணம், பாஜிலாவுக்கு வந்த காதல் கடிதம்.

“அம்மா இங்க பாருமா... இது பாஜி பேக்ல இருந்தது.”

“என்னடி இது? யாருடி?”

“இந்த பையன் பேரு கமால்மா! இவன் பாஜி பின்னாலயே சுத்திக்கிட்டிருக்கான்னு என் ஃபிரெண்ட் சொன்னாமா... நீ கூப்பிட்டு கண்டிச்சு வை”

“பாஜி...ஏய் பாஜி.... இங்க வா”

“என்னடி இது?”

“தெரியாது!”

“உன் பேக்ல கிடக்குது...இது கூட தெரியாதா உனக்கு?”

“தெரியலைமா”

“ஒதச்சனா தெரியும் கழுத...யாருடி அவன்?”

“தெரியாதுமா... எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அவந்தான், என் பின்னால சுத்தறான்... என் கூடையில இத போட்டிருப்பான் போல... அவனும் என் கிளாஸ்ல தான் படிக்கிறான்.......... ஆனா, எனக்கு இதெல்லாம் எதுவும் பிடிக்கலைமா”

அதற்கும் மேல் இதை ஊதி பெரிதாக்க விரும்பவில்லை, பாத்திமா. லேசாக கண்டிச்சு விட்டு விட்டாள்.

மர்ஜியும் ஆப்பியும் நல்லபடியாக படிப்பை முடித்து பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணினார்கள். அதன் பின், இருவரும் அருகில் இருந்த இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் வேலை பார்க்க ஆரம்பித்தார்கள். அதோடு மேல்படிப்பையும் தபால்வழியில் தொடர்ந்தார்கள்.

பாத்திமாவுக்கும் வயதாகி விட்டது. மூன்று பேரும் திருமண வயதை எட்டியதும், கொஞ்சம் கவலையாக இருந்தது. மாப்பிள்ளை தேட ஆரம்பித்தாள். நிரம்ப படித்த இவர்களின் படிப்புக்கு ஏற்ற வரன் அமையவில்லை.

கச்சாமாவின் நகைகளை எல்லாம் அழித்து, மூவருக்கும், ஒரே மாதிரியாக மாலை, அட்டிகை, தோடு, வளையல் எல்லாம் வாங்கினாள்.

படிப்பு, அந்தஸ்து, சொத்து இருந்தும், நல்ல மாப்பிள்ளை அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. எடுத்து செய்ய, ஆண்மகன் இல்லாத வீடு என்பதால், சிலர் தயங்கினார்கள், பாத்திமாவும் கச்சாமாவும் எங்கிருந்தோ வந்தவர்கள் என்பதால் சிலர் தயங்கினார்கள், இப்படியாக நாட்கள் போய்க்கொண்டே இருந்தது.

இந்த நேரத்தில், ஒரு வரன், சற்று பிடித்திருந்தது.... ஓரளவுக்கு வசதியும் இருந்தது. ஆனால், படிப்பு ஸ்கூல் வரை தான். ஒரு பெண்ணுக்காவது திருமணம் முடித்து விட்டால், பிறகு அவள் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் பாத்திமாவுக்கு....அதனால், மர்ஜிக்கு இந்த மாப்பிள்ளையை முடித்து விட நாடி, மேற்கொண்டு பேச்சு வார்த்தைகள் நடத்தி வந்தாள்.

அப்போ, உள்ளறையில் அலமாரியை திறந்தவள், அங்கிருந்த சிலேட்டில் ஏதோ எழுதி வைத்திருந்ததை பார்த்து, வெளியே எடுத்தாள். அதில் இவ்வாறு எழுதியிருந்தது,

“எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை” – மர்ஜியா.

(தொடரும்)

-சுமஜ்லா.

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பெண்ணின் சம்மதம் கேட்டு மணம்
செய்விக்கச் சொல்கிறது மார்க்கம்.
மர்ஜியா பேச்சு வார்த்தை நடக்கும்போதே
அதை சொல்லிவிட்டாள்.
ஆனால், அவள் மனதில் ஏதோ ஓர்
எதிகால இலட்சியம் இருக்குமென்று
தோன்றுகிறது.