Thursday, May 21, 2009

இலங்கையில் பிறந்தது என் தப்பா?


வாழ்வின் எல்லை கண்டபின் தான் வானம் வசப்படுமோ?!
தேவை எல்லாம் தீர்ந்தபின் தான் வளமை வந்திடுமோ?!

பாடும் குயிலின் பாட்டினிலே சோகம் வழிகிறதே
மோதும் அலையின் வேகத்திலே ஆசை உதிர்கிறதே!

மனதின் கனவுகள் நினைவுகளாய் கண்முன் விரிகையிலே,
உதறிச்செல்ல முடியாமல், மனச்சுமை அழுத்தியதே!

பச்சைமரத்தின் அழகுதன்னை பருகும் வேளையிலே,
பட்ட மரமும் படும் துயரை பாட்டினில் எழுதுகிறேன்,

கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டேன், சூரியன் இல்லையடா,
உலுக்கி மனதை கேட்டுவிட்டேன், விடியல் இல்லையடா!

கண்ணீர் துளியின் வடிவத்தினால், லங்கையில் என்றும் கண்ணீராய்,
புண்ணில் வெந்நீர் தெளிப்பதனால், வடிவது இப்போ செந்நீராய்!!

உள்ளம் கொண்ட சோகத்துக்கு வானமும் அழுகிறதே,
வெள்ளம் திரண்ட நீர்க்கோலம் மழையாய் பொழிகிறதே!

தமிழன் என்ற சொல்லில் இன்றொரு, வீரத்தை உணர்கின்றேன்!
அமிழ்தின் இனிய தமிழுக்கு, எந்தன் உயிரையும் தருகின்றேன்!

வானம் என்று வசப்படுமென்று மேலே பார்க்கின்றேன்,
வானவில் அங்கே சிரித்திடக் கண்டு ஆறுதல் அடைகின்றேன்!!!

(நான் முன்பு எழுதியது! இன்று இந்த கவிதைக்கு அர்த்தமே மாறி விட்டது போல தோன்றுகிறது)

-சுமஜ்லா

9 comments:

"உழவன்" "Uzhavan" said...

//கிழக்கும் மேற்கும் பார்த்துவிட்டேன், சூரியன் இல்லையடா,
உலுக்கி மனதை கேட்டுவிட்டேன், விடியல் இல்லையடா!//

அத்தனை வரிகளுமே மனதில் ஆணியாய்ப் பாய்கின்றன :-(

SUMAZLA/சுமஜ்லா said...

உழவன் சார், உங்க மகளுக்கு பெயர் வைத்து விட்டீர்களா? என்ன பெயர்?

"உழவன்" "Uzhavan" said...

//உழவன் சார், உங்க மகளுக்கு பெயர் வைத்து விட்டீர்களா? என்ன பெயர்? //

"அகமதி வெண்பா" என்று பெயர் வைத்திருக்கிறேன் தோழி. மிகுந்த ஞாபகத்தோடு விசாரித்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி :-)
பெயர் வைத்தது தொடர்பான என் இந்தப் பதிவை பாருங்கள்.
http://tamiluzhavan.blogspot.com/2009/05/blog-post.html

Anonymous said...

காடுகள் நிறைந்ததது இலங்கை. அங்குள்ள காட்டு விலங்குகளிலே மிகக் கொடிய விலங்கு ”இராச பக்சே”. அது நினைக்கிறது புலி இறந்து விட்டதென்று. ஆனால் புலி பதுங்கியுள்ளது.அது நேரம் பார்த்துப் பாயும். அப்போது இந்த இராச பக்சே கும்பல் மாயும். புலிகளால் அது முடியும். தமிழ் ஈழம் விடியும்.

தேவன் மாயம் said...

வாழ்வின் எல்லை கண்டபின் தான் வானம் வசப்படுமோ?!
தேவை எல்லாம் தீர்ந்தபின் தான் வளமை வந்திடுமோ?!
///
தற்போதும் பொருத்தமாக உள்ளதே!!

SUMAZLA/சுமஜ்லா said...

அட! நான் கூட இதை கவனிக்கவில்லையே?!

Biruntha said...

அன்பு சுஹைனா,
உங்கள் வரிகள் எம் நெஞ்சங்களையெல்லாம் பிளிகின்றது. என்றோ ஒருநாள் எமக்கு விடியல் கிடைக்கும் அன்று எம் தானைத்தலைவன் கையால் எம் கொடி ஏற்றப்படும். இன்று எம்மை ஏளனமாகப் பார்ப்பவர்கள் எல்லாம் தோல்வியால் வெட்கித்தலை குனியும் காலம் வெகுதொலைவில் இல்லை.

அன்புடன்
பிருந்தா

SUMAZLA/சுமஜ்லா said...

அன்பு பிருந்தா,
உறக்கம் கலைந்து சிலர் எழும் போது, விழிப்பு மறைந்து சிலர் உறங்கித்தான் ஆகணும்.

கானா பிரபா said...

வலிக்கும் நிஜத்தை கவிதையாக்கி இருக்கிறீர்கள்