Thursday, May 21, 2009

மலர்ந்தும் மலராமல் மறைந்து முடிந்திட்ட மகளின் கதை கேளுங்கள்


இது என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம்.


வயிற்றில் பூத்த ரோஜா மலரே வாடிப் போன தேனோ?
வசந்தம் பொங்கும் ஜீவ நதியும் வற்றிப் போன தேனோ?
மாணிக்க தொட்டில் கட்ட மனதினிலே நினைத்திருந்தேன்.
மண்ணறையைத் தேடி நீயும் மறைந்து போன மர்மமென்ன?

கருவான நாள் முதலாய் கற்பனைகள் பலகோடி!
கற்கண்டே கசப்பாக கரைந்துவிட்டாய் கண்மணியே!!
உதிரத்தின் உறவே என் உயிர் சோகம் புரியாதோ?!
புதிரானாய் புவியினிலே புன்னகையை மறந்தேனே?!

கண்விழிக்கும் முன்னே உன் கண்மூடிப் போனாயே,
கண்ணே உன் தாய் முகத்தைக் காணும்முன்னே அவசரமோ?!
ஆறு திங்கள் தாய்ப்பாசம் ஆழ்மனதில் சுமந்திருந்தேன்!
மாறுபடா திருந்திருந்தால் மடியினிலே சுமந்திருப்பேன்!!

யாரு கண்ணு பட்டதினால் எங்க கிளி மறைந்ததுவோ?!
வேறு வழி இல்லையிங்கே வேதனையில் துடிக்கின்றேன்.
கை நிறைய கண்மணியை கனவினிலே கண்டிருந்தேன்,
கண்ணிறையக் கண்ணீரை காணிக்கையாய் நீ தந்தாய்!

உன் அக்கா இரு விழியில் கனா தேக்கிக் காத்திருக்க,
அனுதினமும் ஆசைமுத்தம் வயிற்றின் மீது ஈந்திருக்க,
முத்த ஈரம் காயும் முன்னே முடிவாகிப் போனாயே!
இரத்த பந்த உறவுகளை இரணமாக்கிச் சென்றாயே!!

இறை ஏனோ உன் உடலில் குறை ஏதோ வைத்திட்டான்-
மறைவான அவன் நாட்டம் மனிதர்களும் அறியாரே!
மஹ்ஷரிலே வந்துவிடு மயில்கரத்தில் நீரேந்தி,
மறையோனின் கிருபையாலே அதுவரைக்கும் பொறுத்திருப்பேன்!

நான் பொரித்த பெட்டைக் குஞ்சு நானிலத்தின் மடியினிலே,
வான் மழையாய் பொழியுதம்மா என்கண்ணீர் துளிகளுமே!
மண்ணறையின் மேல் நனையும் அம்மழையின் சாரலினால்,
என்கரத்தில் துயில்வதுபோல் நீள்தூக்கம் கொண்டிடுவாய்!

நெஞ்சத்திலே மஞ்சம்தந்து கொஞ்சிட நான் காத்திருக்க,
தஞ்சமென கவினமுது கப்ருக்குள்ளெ அடங்கிவிட்டாய்!
இங்கிருந்தே தாலாட்டு உனக்காக பாடுகிறேன்,
சொர்க்கத்துப் பூஞ்சிட்டே சுகமாக நீயுறங்கு!!

-சுமஜ்லா

5 comments:

Thamiz Priyan said...

என்னங்க அக்கா.. இப்படி சோகத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்... :( எல்லாம் நன்மைக்காகவே இறைவனின் நாட்டம் என நினைத்துக் கொள்ளுங்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

இது என் மகன் பிறப்பதற்கு முன் நடந்தது. பல வருடங்கள் ஆகி விட்டது.

Unknown said...

சோகம்தான் அம்மணி.தாய்க்குத்தான் தெரியும்.

ராமலக்ஷ்மி said...

தாயின் தவிப்பு:(! காலம் ஆற்றட்டும். மனம் தேறட்டும் மகனின் முகம் பார்த்து.

SUMAZLA/சுமஜ்லா said...

ராம லஷ்மி அவர்களுக்கு நன்றி! இது நடந்து முடிந்து ஏழாண்டுகள் ஆகி விட்டது. இப்போ என் மகனுக்கு வயது ஆறு.