Wednesday, June 3, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 8


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

“வாழ்க்கையில் ஒரு முறை வருகின்ற வசந்தம்,
வண்ண வண்ண பூவாய், கனவுகள் மலரும்;
வஞ்சியின் ஆசைகள், கொடிபோல் படரும்,
வாழ்நாள் முழுதும் அந்நினைவுகள் தொடரும்”

கல்யாணத்துக்கு இன்னமும் ஒரு வாரந் தான் இருந்துச்சு. அம்புட்டு பேரும் கல்யாணத்துக்காக, முத்தம்மா வீட்டுக்கு ஜாகையை மாத்திட்டாங்க. கச்சாமாவுக்குள் எல்லாமே மாறிப்போச்சு... மனசெல்லாம் ரெக்க கட்டி பறக்குறாப்புல ஒரு இதுவா இருந்துச்சு. நெஞ்சாங்கூட்டுக்குள்ள, கண்ணுல கூட இதுவரைக்கும் பார்க்காத மச்சானைப் பத்தின நெனப்பு சதாசர்வகாலமும் ஓடிக்கிட்டே இருந்துச்சு.

ஊட்டுல வேலைங்க பரபரனு நடந்துகிட்டிருக்குது. ஒரு பக்கம், மொளவுடி இடிக்க மொளகா காயுது. ஒரு பக்கம், கவுத்துக் கட்டில்ல, துணிய விரிச்சு, கோலத்துக்குப் புள்ளி வெச்சாப்புல, கஞ்சி வடகம் காயுது, இன்னொரு பக்கம், பாத்திமா, மிசின்ல உக்காந்து, கச்சாமாவோட, கல்யாண ஜாக்கிட்டெல்லாம் தெச்சுக்கிட்டிருக்கா.

போன வாரம், மதராஸுக்குப் போயி, எல்லாரும் பட்டுத்துணி எடுத்திட்டு வரலாம்னு பொறப்பட்டாங்க. கச்சாமாவையும் கூப்பிட்டாங்க. ஆனா, அவளுக்கு போகவே இஷ்டமில்லை. மச்சானை உட்டுட்டு, தூரமா போறோமேங்கற எண்ணந்தான். இப்ப மூணு மைலா இருக்கற இடைவெளி அப்ப, முண்ணூறு மைலா ஆவிருமேனு தவிச்சா. அப்புறம், எல்லாரும் கோயமுத்தூரே போயறாம்னு கூப்பிட, சரினு போயிட்டா. பட்டுல, உடுப்பு சேலைங்க, அஞ்சு எடுத்தாங்க. அதுல ரெண்டு பனாரஸ் பட்டு. மொதோ உடுப்பு ஏழு சீர் அன்னிக்கு கட்டுனும்... வானவில் கலர்ல, நெருக்கமா கெண்ட போட்டு இருந்ததுதான் கச்சாமாவுக்கு ரொம்ப புடுச்சு போச்சு. அந்த சீலைய தூக்கி பார்த்து, அம்மா எம்புட்டு கனம்னு நெனச்சு அசந்து போயிட்டா.

ஆச்சு, கண்ணாலத்துக்கு இன்னும் ரெண்டு நா தான் இருக்கு. விடிஞ்சா சுக்ரானா. ஜனக்கூட்டத்துல வீடே தெணறிக்கிட்டு இருக்கு. சல்மா குப்பி, அய்சாமா குப்பி, சிச்சாமாருங்க எல்லாரும், அங்க தான் ஜாகை. எங்க பார்த்தாலும் கல்யாண சத்தம் தான். பாத்திமாவுக்கு ஒரு நிமிஷம் ஓய்வு ஒழிச்சல் இல்ல.

“பாத்திமா! பணியாரத்துக்கு மாவு இடிச்சாச்சா?”

“ஏ பாத்திமா! சீசாப்பிடி சாமானமெல்லாம் தயாரா?”

“அண்ணா! அம்மா வீட்டுல போயி, ஒலக்க ரெண்டு எடுத்திட்டு வா!”

“பாத்திமா! மாப்பிள்ளைக்கு வாய் கொப்பளிக்க தஸ்த்து வாங்கியாச்சா?”

“சீர் லிஸ்ட் எழுதியாச்சா? நா அன்னிக்கே சொன்னன்ல, எங்க வீட்டுக்கு ஆளனுப்பி, வெள்ளி பன்னீர் சொம்பும் பன்னாங்குழியும் எடுத்தாரச் சொல்லு!”

ஆளாளுக்கு ஒவ்வொன்னா பார்த்துக்கிட்டு இருந்தாங்க. கச்சாமாவுக்கு தோழிமாருங்க, சவுதாவும், ரஜியாவும் மருதாணி வெச்சு விட வந்திட்டாங்க. நெல்லு வாசல்ல, மருதாணி செடியில, நல்ல கொழுந்தா தலைங்க உருவியாந்து, கொட்ட பாக்கும் புளியும் வெச்சு அம்மியில, நெவு நெவுனுஅரைச்சு, வெச்சு விட்டா ரஜியா. நடுக்காண்ட ஒரு வட்டந்தட்டி, வெரலுக்கெல்லாம், அப்படியே தொப்பி போட்டு விட்டாச்சு.

“ஏய்! அழகா வெச்சு விடுங்கடி! என்ன இப்படி வரட்டி தட்டுறா மாதிரி தட்டறீங்க?” சிணுங்கினா கச்சாமா.

“ஆமா! உன்ற மச்சான் பார்ப்பாருன்னு, உனக்கு ரொம்ப அக்கறையாக்கும்” எல்லாரும் உழுந்துழுந்து சிரிச்சாங்க. கச்சாமாவுக்கு வெட்கம் பிடுங்கி திங்குது!

சுக்ரானா அன்னிக்கு காலங்காத்தாலயே, கச்சாமாவோட, எல்லா நகையையும் கழட்டி வெக்க சொன்னா பாத்திமா.

“ஏம்மா? எல்லாத்தையும் கழட்ட சொல்லற?”

“மஹர் சொமக்கணுமில்ல. அதுக்கு தான். இன்னிக்குப் பூரா மொட்ட காதா, மொட்ட கழுத்தா இருந்திட்டு, நாளைக்கு புதுசா போடறாப்புல, நகை போட்டா தான் பார்க்க, ஒளிவா இருக்கும், மொகத்துல நூர் எலங்கும். சீக்கிரம், கழட்டி குடு, அலமாரியில வெச்சு பூட்டணும். வேலைக்காரங்க வெட்டிக்காரங்க வரபோற எடத்துல அசால்ட்டா வெச்சிராத கண்ணு”

எல்லாத்தையும் கழட்டி அம்மாட்ட கொடுத்திட்டா கச்சாமா. பழசா ஒரு பாவாட தாவணி தான் கட்டியிருந்தா சுக்ரானா அன்னிக்கு!

அன்னிக்கு மதியானமே பெருங்கூட்டம் இருந்துச்சு பந்திக்கு. வழக்கப்படி, வெறுஞ்சோறு, பருப்பானம், முட்டைகோஸ் கொத்துக்கறி, ரசம், மோர் எல்லாம் பறிமாறி, ஓஞ்சுது. சோத்து வேல முடிஞ்சொன்ன, படபடனு, எல்லா பொம்பளைங்களும், கருகமணி கோக்க, மாப்பிள்ளை வீட்டுக்கு போக பொறப்பட்டாங்க. பக்கத்தாலயே இருந்த முத்தம்மாவோட தம்பி வீடு தான் மாப்பிள்ளை வீடு. கல்யாணத்துக்காக அங்க ரெண்டு நாளைக்கு வந்திருந்தாங்க.

அங்க மாப்பிள்ளை வீட்டுல, ஒரு பெரிய மனுஷிக்கு, சந்தனம் தடவி, தேங்கா பழம் மடியில போட, அந்தம்மா, அஞ்சு பேரை சாங்கியமா உட்காரவெச்சு, அவங்களுக்கும் அதே மாதிரி தேங்கா பழம் போட்டு, மடிநிரப்ப, அவங்க பிஸ்மி சொல்லி, கருக மணியை கோக்க ஆரம்பிச்சாங்க.

நூல திரிச்சு, வாங்கின கருகமணி சரத்தையும், திரிச்ச நூலையும், பூண்டு சாற்ற தடவி எசப்போட்டு, மெல்ல மெல்ல, கோர்த்தாங்க. அப்புறம் சீசாப்பிடி இடிக்கற சடங்கு.

மைஸ்மாயில் நாட்டு மருந்து கடையில வாங்குன, மஞ்சள் பூலாங்கிழங்கு, வேர், முதலான சீசாப்புடி சாமானத்தை, உரலில போட்டு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒரு ஒலக்கையும், பொண்ணு வீட்டுக்காரங்க ஒரு ஒலக்கையுமாக ஆளுக்கொரு இடியா இடிச்சு சாங்கியம் செஞ்சாங்க. அதே மாதிரி ராத்திரி, பொண்ணு வீட்டுக்கும் வந்து இடிச்சாங்க. இடிச்ச தூளை, கல்யாணத்தன்னிக்கு, பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும், மேலுல தேச்சு தண்ணி ஊத்துனா, சும்மா வாசம் கமகமனு கமக்கும். அதுக்கு தான் இப்படி ஒரு சடங்கு. சாயந்திரம் ரெண்டு ஊட்டுலயும் அஜரத்தை கூப்பிட்டு, சுக்ரான் பாத்தியா ஓதுனாங்க. ராத்திரி, குஸ்கா குருமா. அலுமினிய தட்டுங்களும், கிளாசும், டிரங்கு பெட்டிய திறந்து முத்தம்மா எடுத்துக் கொடுக்க, குப்பிமாருங்க எல்லாத்தட்டுலயும், சோத்தைப் போட்டு, ஒரு துண்டு கறியும், ஒரு உருளைக்கிழங்கும் வெச்சு, பர்த்தி பண்ணி தர, மாத்து விரிச்சு, அதுல, அந்த தட்ட வெச்சு, எல்லாரும் சாப்பிட்டாங்க. டிஸ்ஸுல சோறும், பக்கீட்டில, தால்ச்சா, தயிர்சட்னியும் தலையில் இருந்த மல்லி முல்ல வாசமும் சேர்ந்து கல்யாண ஊட்டுக்கே உண்டான ஒரு கலவையான மணத்த குடுத்துச்சு.

எல்லாரும் பட்டும் பதவிசுமா வர, கண்ணால பொண்ணு தான் சுக்ரானா அன்னிக்கு, பழையத உடுத்திக்கிட்டு, நகைநட்டுமில்லாம ஏழையாட்டம் இருக்கும்.

ஆச்சு விடிஞ்சா கோழி கூப்புட கல்யாணம். கச்சாமாவுக்கு தூக்கமே வரல. கண் நெறைய கனா தான்.

எப்ப தூங்கினோம் எப்ப எந்திரிச்சோம்னு தெரியாத அளவுக்கு ஜாமத்துல மூணு மணிக்கே எழுப்பி உட்டுட்டாங்க. சீசாப்பிடி சாமானமெல்லாம் மேலுல தேச்சு குளிச்சிட்டு வந்தா. மஞ்சள் வனப்புல, அவ களையான மொகம் இன்னும் களையா இருந்திச்சி! அப்படியே நெட்டி முரிச்சி திருஷ்டி கழிச்சா பாத்திமா.

விடியக்காலம், நாலஞ்சு ஆம்பிள்ளைங்க லம்து கேட்க வந்தாங்க.

“எண்ணைமண்டி காதர்சா பேரனும், மைதீன்சாயபு மகனுமான தஸ்தகீரை, முன்னூற்றி பன்னிரெண்டரை ருவாய் மஹருக்கு மணம்முடிக்க சம்மதமா?” பெரியவங்க கேட்க, வெட்கத்தில் அப்படியே பதில் சொல்ல முடியாம நின்னா கச்சாமா.

“அல்ஹம்துலில்லாஹ் சொல்லு!”

“அல்ஹம்துலில்லாஹ்” அவ சொன்னது அவ மனசுக்குக் கூட கேட்டதோ என்னவோ?!

நிக்காஹ் முடிஞ்சது. இங்க பொண்ணுக்கு, செவப்பு சுங்குடி சீலை கட்டி விட்டாங்க. மாலை போட்டு, நலங்கெடுத்து, தேங்காய் பழம் போட்டு, தலையில வகிட்டின் இருபுறமும், மசுரு மேல சந்தனத்தால பொட்டு வெச்சாங்க. வலது கைக்கு பதினொன்னும், இடது கைக்கு ஒம்போதுமா பச்சை சாணை வளையல் போட்டு விட்டாங்க. லடுக்கண் மைபந்து கட்டி விட்டாங்க.

தலைக்கு மேல, ஒரு தாவணியில ஆரஞ்சி முட்டாயும், குட்டி பிஸ்கோத்தும் நிறைய போட்டு, ரெண்டு பொம்பளைங்க, பிடிச்சிக்கிட்டிருந்தாங்க.

“தாலி கட்டப்போறோம்; எல்லாரும் நல்ல துவா செய்யுங்க!” சொன்னபடியே பாத்திமா தன் கண்ணை தொடச்சிக்க, கருக மணி கட்டியாச்சு! கச்சாமா கண்ணுலயும் கதகதனு தண்ணி! நிக்கா முடிஞ்சதுக்கு அடையாளமா, தலைக்கு மேல பிடிச்சிருந்த முட்டாயை எல்லாருக்கும் வாரி இறச்சாங்க! அதப் புடிக்க, சின்ன பிள்ளைங்களோட தள்ளுமுள்ளு பார்க்க தமாஷா இருந்துச்சு.

கேசரி, கறிஉப்புமா நாஷ்டாவை சாப்பிட்டுட்டு, ஜனமெல்லாம் கலைய ஆரம்பிச்சிருச்சு! பொண்ண சித்த நேரம், படுத்துத் தூங்க சொன்னாங்க. தூக்கம் எங்க இருந்து வரும்??!!

பக்கத்துல சைதா உட்கார்ந்திருந்தா!

“சைதா! போயி மாப்பிள்ளை எப்படி இருக்கார்னு பார்த்திட்டு வா!” கச்சாமா மெதுவா குசுகுசுனு சொல்ல, போய் பார்த்திட்டு வந்தா சைதா.

“என்ன சைதா? மச்சான் அழகா இருக்காரா? செவப்பா இருக்காரா? எதாவது பேசினியா அவர்ட்ட?”

“ம்.. நீ ஸலாம் சொன்னேனு நானே சொல்லிட்டேனக்கா! மாப்பிள்ளை உன்ன விட கருப்பு தான். மூஞ்சி, ஒடுக்குழுந்து கடக்குது. நல்லா கறியா ஆக்கி போட்டைனா, சதை வெச்சுக்குவாரு!”

சினிமாக்காரனாட்டம் இருக்கணும்னு ஆசைப்பட்ட கச்சாமாவுக்கு அப்படியே மொகம் உழுந்து போச்சு.

சாயந்திரம், எல்லை மிதிக்க, மாப்பிள்ள ஊட்டுக்கு போனாங்க. சைதா தான் பொண்ணு தோழியா கூட போனா. அங்க உப்பரிசி அளந்தாங்க. விளக்க பார்த்தாங்க. கண்ணாடி பார்த்தாங்க. ராத்திரி, பொண்ணு வீட்டுல ஜில்வா செஞ்சாங்க. பொண்ண சீவி சிங்காரிச்சு, அட்டைப் பூவெல்லாம் தெச்சு, சமிக்கி சேலை கட்டி விட்டு, அலங்கார பொம்மையாட்டம் ஆக்கிட்டாங்க.

ஊஞ்சல் கட்டி, அதுல, சங்கிலிக்கெல்லாம் மாத்து சுத்தி, வாழை மரம் கட்டி, அலங்காரம் செஞ்சாங்க. மாப்பிள்ளைய மேல உட்கார சொல்லி, பொண்ண கீழ உட்கார வெச்சாங்க. குறுக்கால, ஒரு தாவணிய பிடிச்சிக்கிட்டாங்க. மஞ்ச அரிசிய பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தர் மேல ஒருத்தர் தூவ சொன்னாங்க. கயித்துல கட்டின மோதிரத்தையும் வீசச்சொன்னாங்க.

அப்புறம், ஊஞ்சலில எதிரெதிரா உட்காத்தி வெச்சு பெரிய பெரிய கற்கண்டை, பொண்ணு, தோள் மேல, கைமேல, கால் மேல வெச்சு எடுத்தாரு மாப்பிள்ளை மூணு முறை. இதே மாதிரி பொண்ணும் செஞ்சுது. எல்லாரும் ஒரே கேலியா பண்ண, பொண்ணுக்கு வெட்கத்துல அழுகாச்சியே வந்திருச்சு. பெரிசா கண்ணாடி ஒன்ன நடுவுல வெச்சு, முதன்முறையா ஒருத்தங்க மூஞ்சிய ஒருத்தங்க பார்க்க சொன்னாங்க. கச்சாமா, தான் பார்ப்பது தெரிஞ்சா எல்லாரும் கேலி பண்ணுவாங்கன்னு, பார்க்கவேயில்லை. அதனால, அவளுக்கு அவரும் இவளை பார்த்தாரானு தெரியல.

முகத்திரையையெல்லாம் விலக்கிவிட்டு, ஊஞ்சலில, கொஞ்ச நேரம் ரெண்டு பேரையும் வெச்சு ஆட்டி விட்டாங்க. எல்லா சடங்கும் முடிய, ராத்திரி மணி ஒன்னாயிருச்சு.

முத்தம்மா வீட்டுல, தான் மொதோ ராத்திரி. கச்சாமாவுக்கு கனவு ஒரு பக்கம்; என்னன்னே தெரியாத மனச்சங்கடம் ஒரு பக்கம். கனவா இருக்கும் வரை எல்லாமெ இனிச்சுது. ஆனால், நினைவில், அது போல இருக்குமானு தெரியல. கனவு ஒடஞ்சு போயிருமோனு, ஒரு பயம் வந்துது. நாளு போறத எண்ணிட்டு இருந்தவளுக்கு, நிமிஷம் கரையறது, கஷ்டமா இருந்துச்சு.

ஒன்ன மட்டும் நல்லா முடிவு பண்ணிக்கிட்டா! இன்னிக்கு மட்டுமல்ல, இனி எப்போதுமே, வருங்காலத்துல, மச்சான் மனசு கோணறாப்புல எதுவுமே பண்ணக்கூடாதுன்னு மனசுக்குள்ள முடிச்சுப் போட்டுக்கிட்டா. அவரில்லாம, தனக்கு எதுவுமே இல்லைனு வாழணும்னு வைராக்கியம் கொண்டுக்கிட்டா!

தேரொன்னு அசஞ்சு போறாப்புல, வசந்தத்தைத் தேடி, நம்ம வஞ்சிக்கொடி உள்ள போகுது....நாளை வரப்போவது அவளறிவாளா?

(வளரும்.)

-சுமஜ்லா.

6 comments:

Menaga Sathia said...

கதையை படித்து முடித்ததும் பாராட்டமா இருக்க முடியல,சூப்பர் சுகைனா,கல்யாணத்தைப் பத்தி அழகா சொல்லிருக்கிங்க உங்க எழுத்து நடைல பாராட்டுக்கள்!!

நேரிலேயே பார்க்கிற மாதிரி ஒரு ப்ரமை,சுக்ரானானா என்னன்னு இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன்.சூப்பர்ர்ர்ர்

Biruntha said...

எங்களையும் கச்சாமா கலியாணத்துக்கு கூட்டிக்கிட்டுப் போனதுக்கு நன்றி சுஹைனா. ஏன் இதைச் சொல்கின்றேன் என்றால், உங்கள் எழுத்துநடை அங்கு நடந்த முழு சம்பவத்தையும் எங்கள் கண்முன் கொண்டுவந்து விட்டது. உங்கள் திறமைக்கு ஆயிரம் தடவை "வாழ்த்துக்கள்" கூறினாலும் போதாது. வெளிநாடுகளில் நான் பார்த்த திருமணங்கள் எல்லாம் நடந்ததும் தெரியாமல் முடிந்ததும் தெரியாமல் போய்விடும்:-( ஆனால் நம்ம நாடுகளில் வாரக் கணக்காக வீடே களை கட்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அதனை உங்கள் மூலமாக அனுபவித்தும் விட்டேன். இங்கு நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி பக்கத்து வீட்டுக்குத் தெரியாது. நாமாகச் சொன்னால்தான் "அப்படியா" என்று கேட்பார்கள்.

அன்புடன் பிருந்தா

SUMAZLA/சுமஜ்லா said...

அய்யோ, மேனகா, பிருந்தா! உங்க பாராட்டுகளைப் படிச்சா, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

ஆயிரம் தடவை வாழ்த்துக்கு ஆயிரம் தடவை நன்றிங்க!

சில நேரம், எனக்குள் ஒரு மனப்போராட்டம் வரும். நாம் ப்ளாகுக்காக இவ்வளவு நேரம் செலவளிக்க வேண்டுமா என்று? ஆனால், உங்களைப் போன்ற வாசகர்கள் தரும் கமெண்ட் தான் உற்சாக டானிக்காகி என்னை தொடர்ந்து எழுத வைக்குது!

சரியாக சொல்ல வேண்டுமானால், கச்சாமா கல்யாணம் நடந்தது, சுமார் 1966 அல்லது 1967. அதனால், கொஞ்சம் வார்த்தைப் பிரயோகத்தை கவனமாகத் தான் கையாளணும். இப்போ போல அவ்வளவு ஆங்கில வார்த்தைப் பிரயோகம் அன்று இல்லை அல்லவா?

asiya omar said...

சுஹைனா,கச்சாமா கல்யாணம் எனக்கு புதுவிதமாக தெரிந்தது,ஊருக்கு ஊர் பழக்க வழக்கம் மாறுபடும்தானே.அருமையாக எழுதி இருக்கீங்க.

Jaleela Kamal said...

அந்த காலத்து பேச்சு வார்த்தைகளை எப்படி அப்படியே எழுதுறீங்க, இப்ப எல்லாம் மார்டனாகிவிட்டார்கள்.

கல்யாண விருந்தெல்லாம் அந்த காலத்தில் எங்க வீடுகளில் செய்வது தான் //
எல்லாம் ரொம்ப அருமை.

SUMAZLA/சுமஜ்லா said...

ஆசியா அக்கா, ஜலீலா அக்கா,

இப்ப எல்லாரும் மாடர்னாகி விட்டாலும், பல சடங்குகள் இன்னமும் எங்கள் வட்டாரத்தில் பழக்கத்தில் உள்ளது. இதெல்லாம் என் கல்யாணத்திலும் நடந்தது!