Monday, July 27, 2009

கிட்சன் வென்ச்சர்

“எப்பப்பாரு நெட்லயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க! வீட்டுல உங்களுக்கு ஒரு வேலை இல்லை” இப்படி அடிக்கடி சொல்வாள் என் 13 வயது மகள் லாஃபிரா. இத்துணைக்கும் வேலைக்கு ஆள் கூட தற்சமயம் இல்லை. நான் வெகு வேகமாக எல்லா வேலைகளையும் முடித்து விடுவதால், அவளுக்கு அப்படி தோன்றி இருக்கிறது.

9த் படிக்கும் அவளுக்கு 10த் ஆங்கில பாடத்தில் வரும், "Mrs.March Takes A Break" என்னும் பாடம் நடத்தினேன். அதில் Mrs.Marchக்கு ஒரு நாள் முழுக்க ஓய்வு கொடுத்து விட்டு, நான்கு மகள்களும் சமைக்க, உப்பு போடுவதற்கு பதில் சர்க்கரை போட்டு ஒரே காமடியாக இருக்கும்.

இது போல ஒரு நாளின் சமையல் பொறுப்பை அவள் ஏற்றுக் கொள்கிறேன் என்றாள். அதன்படி, முதல் நாள் இரவு நான் கிச்சனை படுசுத்தமாக ஒப்படைத்தேன். அடுத்த நாள் இரவு இதே போல என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒப்பந்தம். ஆக மொத்தம் நேற்று(ஞாயிறு) முழுக்க முழுக்க அவளுடைய தர்பார்.

சனிக்கிழமை, அவங்க பாட்டிக்கு போன் செய்து, மெனு தயார் செய்து, செய்முறை விளக்கம் கேட்டுக் கொண்டாள். இரவு ஒன்பது மணியிலிருந்து அவங்கப்பாவை விரட்ட ஆரம்பித்தாள், அடுத்த நாளைக்கு தேவையான சாமான்கள் வாங்கி வரும்படி. அவரோ, அசைந்த பாடில்லை. காலையில் வாங்கித் தருகிறேன் என்றபடி சுவாரஸ்யமாக டி.வி.யில் மூழ்கி இருந்தார்.

“பார்த்தியாமா, வீட்டுக்கு சாமான் வாங்குவது எவ்வளவு கஷ்டமென்று” அமைதியாகச் சொன்னேன்.

விடுவாளா? ஒரு வழியாக அப்பாவைக் கிளப்பி, இரவு 10 மணிக்கு பக்கத்து கடைக்குப் போய் சாமான் வாங்கி வந்தார்.

அதன் பிறகு, ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டு என்னை துளைத்தெடுத்தாள். “உருளைக்கிழங்கு வேகவைக்க எத்துணை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்?” முருங்கைக்காயை எத்துணை செண்டிமீட்டர் நறுக்க வேண்டும்?” போன்ற சில்லி கொஸ்டியன்ஸ். அவ கேள்வி தாங்காம, கிட்சன் வென்ச்சரை வாபஸ் வாங்கிடலாமா என்று கூட தோன்றியது.

காலையில் நான் நன்றாக தூங்கி விட்டேன். சரியா 9 மணிக்கு வந்து எழுப்பினாள். டைனிங் டேபிளுக்குப் போனால், சுடச்சுட பூரி ரெடியாக இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். நல்ல பசி வேறு. ஒரு பிடி பிடித்துவிட்டேன்.

காலையில் தனக்கும் தம்பிக்கு பால் கலந்து குடித்துவிட்டு, அப்பாவுக்கும், தாத்தாவுக்கு காப்பி போட்டு தந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டேன்(நான் எதுவும் குடிக்க மாட்டேன்). அதோடு, அண்டாவுக்கும் ட்யூப் மூலம் தண்ணீர் பிடித்து வைத்திருந்தாள்.

மசால் அருமை, ஆனா கொஞ்சம் உப்பு மட்டும் போதவில்லை. பூரியை ரொம்ப வேகவைத்து, மொடுக் மொடுக் என்று இருந்தது.

காலை பஜ்ரு தொழுததிலிருந்து தூங்காமல், செய்திருக்கிறாள் என்று புரிந்தது. அதோடு, பாவம் பேத்தி என்று என் மாமனாரும் உடன் வந்து, மாவுக்கு உருண்டை போடுவது போன்ற வேலைகள் செய்து தந்திருக்கிறார்.

மதியம் வரை மீண்டும் நான் கிச்சனுக்குப் போகவேயில்லை. ரைஸ் குக்கரில் சாதம் வைத்துவிட்டு, பருப்பு சாம்பார் காய்ச்சி, அப்பாவிடம் சொல்லி சிக்கன் லெக் பீஸாக வாங்கி, மேனகாவின் லாலி பாப் சிக்கன் மெனுவை நெட்டில் பார்த்து அதே போல செய்து விட்டாள்.

சரியாக மதியம் ஒன்னரை மணிக்கு சாப்பிட போனேன். நாவூற வைக்கும் அழகான டிஸ்ப்ளே. கேமராவில் க்ளிக்கிக் கொண்டேன். (காலை பூரி, பசியின் காரணத்தால், போட்டோ எடுக்கக் கூட மறந்து விட்டேன்)


எல்லாம் ஓக்கே! சாம்பாரில் உப்பும் உறைப்பும் கொஞ்சம் குறைவு. பச்சைத் தண்ணி மாதிரி இருந்தது. அவங்க பாட்டி, கால் கிலோ பருப்புக்கு 3 கோப்பை(1.5லிட்டர்) தண்ணீர் ஊற்ற சொல்லி இருக்கிறார். நான், 150 பருப்பு போதும் என்று சொல்லி விட்டேன். ஆனா, மறதியா அதே 3 கோப்பை இதுக்கும் ஊற்றியதால் இப்போ, தண்ணீர் சாம்பார்.

அது மட்டுமல்ல, சாம்பார் வைத்துக் கொண்டிருக்கும் போது,

“மம்மி, புளி ஊறவைத்திருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு, புளியைத் தூக்கி சாம்பாரில் போட்டு விடணுமா?” என்று கேட்டு என்னை அதிர வைத்தாள்.

சிக்கன் மிக அருமையாக, சுவையாக இருந்தது. ஃபர்ஸ்ட் க்ளாஸ் டேஸ்ட். பெரிய மனுஷி போல சிக்கனை பொறித்தபடி நின்றிருந்ததைப் பார்க்க பெருமையாக இருந்தது.

அவ்வப்போது, அவங்க பாட்டிக்கு(எங்கம்மா) போன் செய்து ரன்னிங் கமெண்ட்ரி வேற.

மாலை வழக்கம் போல, பால் காப்பி எல்லாம் அவளே கவனித்துக் கொண்டாள். இடையிடையே சாமான்களையும் கழுவி அடுக்கிவிட்டாள்.

இரவு, சரியா ஒன்பது மணிக்கு டிபன் ரெடியாகிவிட்டது என்றாள். முட்டை ரொட்டி செய்திருக்கிறாள். மைதா ரொட்டியை லேசாக தேய்த்து, அதை மடக்கிப் போட்டு, அதில் முட்டை ஊற்றி சுட்டு எடுப்பது. அதற்கு சைட் டிஷ்ஷாக காலையில் வைத்த உருளைக்கிழங்கு மசால்.

அதையும் க்ளிக்கிக் கொண்டேன்.


ஹோட்டலில் சாப்பிடுவது மாதிரி இருந்தது எனக்கு. என்ன, முட்டைக்கு தூவின உப்பு மட்டும் கொஞ்சம் தூக்கல். மற்றபடி எல்லாம் ஓக்கே.

“மம்மி அந்த வாசத்திலேயே இருந்ததனால, எனக்கு ருசியே தெரியல”

“ம்... இப்ப புரியுதா, என்னோட கஷ்டம்?”

கிச்சனுக்குள் போய் பார்த்தால், நாறிப் போய் கிடந்தது.

“இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி! நான் கொடுத்தது போல, கிச்சனை சுத்தமா என்னிடம் ஒப்படைக்கணும்!”

அதே போல, சரியா பத்தரை மணிக்கு கிச்சன் படு சுத்தமாக இருந்தது. ஆச்சரியத்தோடு பெருமையுமாக நானும் அவரும் வேர்த்து பூத்துப் போயிருந்த மகளை அணைத்துக் கொண்டோம். அவர் மகளின் பிஞ்சு விரல்களை நீவிவிட்டு சுளுக்கெடுத்து விட்டார்.

சந்தோஷமாக நான் சொன்னேன், “கண்ணு, நீ செய்த இந்த அட்வென்ச்சரைப் பற்றி நான் ப்ளாகில் எழுதப் போறேன்!”

“வேண்டாம் மம்மி!”

“ஏம்மா?”

“இல்ல, இதப் படிக்கற எல்லாரும், அவங்கவங்க மகளை இதே மாதிரி எக்ஸ்பெரிமெண்ட் செய்ய சொல்வாங்க! நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது...”

“இப்ப புரியுதா? இவ்வளவு வேலையும் சீக்கிரமா செய்து முடிச்சிட்டு தான் நான் நெட்ல உட்கார்கிறேன்னு?”

“நல்லா புரியுது மம்மி!”

-சுமஜ்லா
.
.
.

34 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நடுவில் பின்வாங்காமல் ஒத்துக்கொண்ட பொறுப்பை முழுநாளும் செய்து காட்டிய மகளுக்கு பாராட்டுக்கள்..

:)

நட்புடன் ஜமால் said...

செம பசி

இந்த நேரத்தில் இந்த பதிவு


நல்லாயிருங்க மக்கா...

சந்தனமுல்லை said...

:-)

Anonymous said...

முதல்ல உன்னை பாராட்டனும் இங்கும் இதே கேள்வி தான் எப்ப பார்த்தாலும் நெட்ல தானானு நானும் அப்படித்தான்ப்ப காலையிலேயே எல்லா வேளையும் செய்துடுவேன்..ஆனால் இப்ப நீங்க சொன்ன மாதிரி செய்யலாமான்னு யோசிக்கிறேன்.ஏன்னா நான் எந்த வேளையும் அவளை செய்யவிடுவதில்லை..ஆனால் உங்க ஒப்பந்தம் நல்லாயிருந்தது அந்த குழந்தையின் கையை பிடிச்சி கண்ணில் ஒத்திக்கனும் போல இருந்தது..உண்மை பா பாப்பா சொன்ன மாதிரியே படிக்கும் போதே நானும் நினைச்சேன் நாமளும் சொல்லாமான்னு அதுக்குள்ள வேணாம்மா அப்புறம் எல்லாரும் செய்ய சொல்லப் போறாங்கன்னு முகம் தெரியா தோழிகளை காப்பாத்திட்டார் உங்க அன்புமகள் என் அன்பை தெரிவியுங்கப்பா மகளுக்கு...

Vidhoosh said...

வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் மகளுக்கும். திருஷ்டி சுத்தி போடுங்க.

S.A. நவாஸுதீன் said...

ஆச்சரியமாவும் இருக்கு, சந்தோஷமாவும் இருக்கு. வாழ்த்துக்கள் உங்கள் அன்பு மகளுக்கு

துபாய் ராஜா said...

தாயைப் போல பிள்ளை. நூலைப்போல சேலை.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.

என்ற வார்த்தைகளின்படி

அம்மாவைப் போல பொறுப்பான பெண்.வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

சுஹைனா உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்.


எனக்கு பெண்குழந்தை கிடையாது. எல்லாம் நானே தான்.மேனகா லாலி பாப் அது என் மெத்தேட் தான்.


அதுவும் மாட்டேன் என்று சொல்லாமல் எடுத்து செய்து கொடுத்தாளே ரொம்ப கிரேட் லாபிரா தான், இதை படிக்கும் போது நான் 8 வது படிக்கும் போது முதலில் செய்த செய்த சமையல் எல்லாம் ஞாபகம் வருது

Jaleela Kamal said...

டிஷ் எல்லாம் அருமை முட்டை ரொட்டி பார்த்ததும் இப்பவே செய்யனும் போல் இருக்கு.
ஊருக்கு போய் வந்து விட்டேன். பையனை பிரிந்த்ததால் ஒரே சோகம், சரியா சமைக்க முடியல.

Jaleela Kamal said...

ஊருக்கு போய் பையனை காலேஜில் சேர்த்து விட்டு வந்தேன்.சுஹைனா ஊருக்கு போகும் முன் போட்ட மெயில் பார்த்தீஙக்ளா?

இளையராஜா said...

அருமை

அதிரை அபூபக்கர் said...

வாழ்த்துக்கள் சமையல் செய்த‌, உங்கள் அன்பு மகளுக்கு...!

kavi.s said...

சுமஜ்லா ஒரு 10 வருஷம் லேட்டாயிடுச்சு,இல்லனா பொறுப்பு முழுக்க உங்க பொண்ணுகிட்ட கொடுத்துட்டு ஹாயா இருந்திருப்பேன்:),
உப்பு உறைப்பு கம்மியா இருக்கறதெல்லாம் ஒரு மேட்டரா? நான் இப்ப செய்ற சமையலே அப்படிதான் இருக்கு:), இருந்தாலும் உப்பு மேட்டரெல்லாம் மனதில் இருந்திருக்காது, அந்த சமயத்தில் உங்களுக்கு அந்த உணவு அமிர்தமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன் கரெக்டா??

அது சரி பாட்டிகிட்ட ஏன்? பக்கத்திலிருக்கும் உங்ககிட்ட எப்படி சமையல் செய்யணும்னு கேட்டிருக்கலாமே?(உங்க சமையலின் அருமைய‌ பத்தி உங்க பொண்ணுக்கு தெரிந்தனால கேட்கலையோ:))

S.A. நவாஸுதீன் said...

kavi.s said...

அது சரி பாட்டிகிட்ட ஏன்? பக்கத்திலிருக்கும் உங்ககிட்ட எப்படி சமையல் செய்யணும்னு கேட்டிருக்கலாமே?(உங்க சமையலின் அருமைய‌ பத்தி உங்க பொண்ணுக்கு தெரிந்தனால கேட்கலையோ:))

அதானே!!!

இது ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயமா இருக்கே!!!

SUMAZLA/சுமஜ்லா said...

//அது சரி பாட்டிகிட்ட ஏன்? பக்கத்திலிருக்கும் உங்ககிட்ட எப்படி சமையல் செய்யணும்னு கேட்டிருக்கலாமே?(உங்க சமையலின் அருமைய‌ பத்தி உங்க பொண்ணுக்கு தெரிந்தனால கேட்கலையோ:))//

அதுவா? எனக்கே தெரியாம மெனு எல்லாம் சஸ்பென்ஸா இருப்பதற்காக!

அது மட்டுமல்ல, அவ கேட்கும் சில்லி கொஸ்டியன்ஸ்க்கு எல்லாம் எங்கம்மா தான் பொறுமையா பதில் சொல்வாங்க.

காலையில் எனக்கு போன் செய்தாங்க எப்படி எல்லாம் ஓக்கேவானு கேட்க! நான் ப்ளாகில் பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

தமிழரசி, இது போன்ற வைத்தியம் நம் பிள்ளைகளுக்கு தேவை தான். வாழ்க்கையை அவர்கள் நல்லவிதத்தில் புரிந்து கொள்ள உதவும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//அம்மாவைப் போல பொறுப்பான பெண்.வாழ்த்துக்கள்.//

ஜோக் ஆஃப் த இயர் என்று பக்கத்திலிருக்கும் என் கணவர் சொல்கிறார்.

SUMAZLA/சுமஜ்லா said...

மற்றபடி, வாழ்த்திய முத்துலெட்சுமி, வித்யா,ஜமால், சந்தனமுல்லை, துபாய்ராஜா, நவாஸ், இளையராஜா, அபூபக்கர், ஜலிலாக்கா, கவி எல்லாருக்கும் நன்றி!

மகள் ஸ்கூல் விட்டு வந்ததும் படித்து சந்தோஷப்பட போகிறாள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//அந்த சமயத்தில் உங்களுக்கு அந்த உணவு அமிர்தமா இருந்திருக்கும்னு நினைக்கிறேன் கரெக்டா??//

உண்மை தான் கவி; எதாவது ஒரு நாள், பிய்ஞ்சு பிய்ஞ்சு அவர் சுட்டுத் தரும் தோசையே அமிர்தமாக தெரியும் போது, குட்டிப் பெண் செய்தது எப்படி இருக்கும் பின்ன?

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா, மெயில் பார்த்தேன். அதுக்குள் ஊருக்குப் போய் வந்து விட்டீர்களா? பையனை எந்த கோர்ஸ், எந்த காலேஜில் சேர்த்தீர்கள்.

உங்க ரெஸிப்பியா இது? அவ ஆனா, மேனகா ப்ளாகில் பார்த்துத் தான் செய்தா!

Jaleela Kamal said...

காலேஜ் விபரம் மெயில் பண்றேன்.

ஆமாம் சுஹைனா மேனகா அதில் என் பெயரை குறீப்பிட்டு இருப்பார்கள்.
என் முறை + அவ‌ர்கள் முறையும் கலந்து செய்து இருப்பார்கள்.

ஆல் ரெடி நிறைய‌ லாலிபாப் ரெசிபி என்னுடைய‌து அருசுவையில் இருப்பாதால் பிளாக்கில் ஒன்லி லெமென் லாலிபாப் ம‌ட்டும் போட்டு உள்ளேன்.

Unknown said...

பொறுப்பான பொண்ணு.. உங்களை போலவே வருகிறாள் உங்கள் மகள்

asiya omar. said...

ஹாய் லாபிரா,லவ்லி லாலி பாப்,எம்மி எக் பரோட்டா,சூப்பர் சாம்பார் ம்ம்,அம்மா கொடுத்து வச்சவங்க,என் மகள் ருமானாவும் மினி தோசை,சேமியா பாயாசம் இப்படி ஒரு நாள் செய்து கொடுத்தாள்.அந்த நினைவு வந்து விட்டது.உனக்கு பதிவு போடவே அவசரமாக வந்தேன்.வாழ்த்துக்கள்,அம்மா ப்ளாக்கில் மகளின் சமையல் குறிப்பு.பாராட்டுக்கள்.

நிஜாமுத்தீன் said...

இப்படி பொறுப்பைக் கொடுத்துவிட்ட அம்மா!
அப்படி பொறுப்பை முடித்துவிட்ட மகள்!
இருவருக்கும் பாராட்டுக்கள்!

Lafira / Lamin said...

Thanks for all Aunties and Uncles.
-Lafira

"உழவன்" "Uzhavan" said...

கடமையுணர்வும் பொறுப்புணர்வும் மேலோங்கி நிற்கிறது. பாராட்டுக்கள்!

Menaga Sathia said...

கம்ப்பூட்டர் மக்கர் செய்துடுச்சு,இன்னிக்குதான் சரி செய்து எடுத்து வந்தார்.

லாபிரா செல்லத்துக்கு என் பாரட்டுக்கள்.நான் செய்ததைவிட லாலிபாப் என்ன அழகா செய்து ப்ரெஷண்ட் செய்துருக்காங்க.பார்க்கும் போதே சாப்பிடத் தோனுது.முட்டை ரொட்டி யும் சாப்பிட தோனுது.இந்த் வீக் எண்ட் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன்.இவ்வளவு பொருப்பா செய்துருக்காங்க.
அதுக்குள்ள நான் கற்பனை செய்து பாக்குறேன் என் பொண்ணும் இப்படி நமக்கு செய்வாங்களான்னு.
லாபிரா அம்மாவைப் போல நீயும் எல்லாத்துறையிலும் கலக்க வாழ்த்துக்கள்!!

SUMAZLA/சுமஜ்லா said...

ஆஹா...மேனகாவுக்கு ஆசையைப் பாருங்க அதுக்குள்ள?! ஷிவானி குட்டி செய்து தரப்போற டிஷ்ஷை சாப்பிட!

Lafira / Lamin said...

Thank you aunty. I have a blog. amma created for me. no posts yet. after posting i will give link. i dont know tamil type. - lafira

GEETHA ACHAL said...

லாபிராவிற்கு என்னுடைய பாரட்டுகள்...பாருங்க சுகைனா...உங்கள் பொண்ணு உங்கள் எல்லோருக்கும் எவ்வளவு அழக்காக மிகுந்த அக்கறையுடன் சமைத்து கொடுத்து இருக்காங்க...

இதனை படித்த பிறகு எனக்கும் ஒரே(இரண்டு) ஏக்கமாக போச்சு...ஒன்று நான் சின்ன வயதில் இப்படி என்னுடைய அம்மாவிற்கு செய்தது இல்லையே.... இரண்டு என்னுடய் அக்ஷ்தா குட்டி இப்படி எனக்கு செய்வாளா...பார்ப்போம்...

Menaga Sathia said...

லாபிரா நீங்களும் சீக்கிரம் ப்ளாகில் எழுதுங்க.அம்மாவை போல நீங்களும் கலக்குவீங்கன்னு சந்தேகமில்லை.உன் போட்டோவும் பார்த்தேன்.சோ க்யூட்.அம்மாகிட்ட சொல்லி சுத்தி போட சொல்லுங்க.ஆல் தி பெஸ்ட்!!

SUFFIX said...

//“இல்ல, இதப் படிக்கற எல்லாரும், அவங்கவங்க மகளை இதே மாதிரி எக்ஸ்பெரிமெண்ட் செய்ய சொல்வாங்க! நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது...”//

தங்கள் மகள் லாஃபிரா அவர்களின் அன்பினை வெளிப்படுத்தும் ஆழமான சொற்க்கள். சமையல் பதிவு சூப்ப்ர். பாராட்டுக்கள் சகோதரி.

Biruntha said...

வாழ்த்துக்கள் லாபீரா. இப்போதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். படித்ததும் உங்களைப் பாராட்டாமல் போக மனமில்லை. என்ன அருமையாக சமைத்து அசத்தியிருக்கின்றீர்கள். நானும் சின்ன வயசில மீன்குழம்பும் கீரைக் கறியும் வைச்சன். ஆனால் அதை வாயில வைக்க முடியேல்லை. வீட்டில் யாரும் இல்லாத சமயம் திடீரென்று விருந்தினர் வந்தாங்க:-( ஏதோ என் சமையலை சாப்பிட்டுப் போட்டாங்க.
பி.கு.: அவர்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கின்றார்கள்.

ஆனால் நீங்கள் என்ன சூப்பரா சமைத்து அசத்தியிருகின்றீர்கள்.

அன்புடன்
பிருந்தா

SUMAZLA/சுமஜ்லா said...

பிருந்தா, உங்க பி.கு. படித்து வாய்விட்டு சிரித்தேன்.