Saturday, August 15, 2009

அமுக்கான் உங்களை அமுக்கியிருக்கா?

என்னிக்காவது உங்களுக்கு தூக்கத்துல அமுக்கான் வந்து அமுத்தி இருக்கா? அட, இது கதை இல்லைங்க, கொஞ்சம் சீரியஸ் மேட்டர் தான். எனக்கு நேற்று அப்படித்தாங்க நடந்தது. எனக்கு இது பற்றி எழுதவே கொஞ்சம் நடுக்கம் தான், ஆனாலும் சுவாரஸ்யமான விஷயம்.

பேய், பிசாசு பற்றியெல்லாம் அப்பப்ப யாராவது எதாவது சொல்லிட்டே இருப்பாங்க. எல்லாத்தையும் நம்ப முடியாது. ஆனா, எங்கம்மா சின்னவயசில பார்த்தத சொல்லுவாங்க. கேட்கறச்சயே பயமா இருக்கும்.

அப்போ, அவங்க சின்ன பிள்ளையா இருந்தப்ப, ஓதாட்டு நன்னீமானு ஒருத்தங்க இருந்தாங்களாம். அவங்க நிறைய ஓதுவாங்களாம். இந்த பேயோட்டறது, திருஷ்டிக்கு மந்திரிச்சு தர்ரது எல்லாமே செய்வாங்களாம். ஒரு நாள், எங்கம்மா, ஒளியற விளையாட்டு விளையாடிட்டு இருக்கறப்ப, இந்த ஓதாட்டு நன்னீமா வீட்டு மொட்டை மாடிக்கு ஒளிய போனாங்களாம்.

இவங்க கொஞ்ச நேரம் கைபிடி சுவர் கிட்டயே நின்னிட்டிருந்திருக்காங்க. அப்புறம், ஒரு மூலையில ஒளியலாம்னு போனா, ஒரு உருவம், வெள்ளையா துணிய போர்த்திக்கிட்டு உட்கார்ந்து இருந்துச்சாம். இத பார்த்து அலறி அடிச்சு ஓடி வந்தவங்க தான், ரொம்ப நேரம் நடுங்கிக்கிட்டே இருந்து காய்ச்சலே வந்திருச்சாம்.

ஆனா, நேற்று எனக்கு வேற மாதிரியான அனுபவம். நான் தூங்கிக்கிட்டு இருக்கேன். ஜாமத்துல ஒரு மூன்று மணி இருக்கும். எனக்கு ஒன் பாத்ரூம் அர்ஜண்ட். போகலாம்னு எந்திரிச்சா, ம்...ஹூம்... கையையும் காலையும் அசைக்கவே முடியல. சுமார் அரை மணி நேரம் போராட்டம். ஆனா, கண் விழிக்கல. மூடிய கண்ணுக்குள் நினைவு இருக்கு. ரொம்ப நேரம் கழித்து, ரொம்ப பிரயாசைப்பட்டு, என் சக்தியெல்லாம் திரட்டி, வேகமாக கையை தூக்கினேன். பிறகு தான் என்னால் எழ முடிந்தது.

இதோடு இது முடிஞ்சிரும்னு தான் நினைத்தேன். ஆனா, இதுக்கு ஒரு காரணம் இருக்கு! கடந்த இரண்டு நாளா ஸ்கின் அலர்ஜிக்காக ஒரு மாத்திரை சாப்பிடுகிறேன். அது கொஞ்சம் தூக்கம் வரும்னு சொல்லியே தான் டாக்டர் கொடுத்தார். ஆனா, தூக்கம் எப்படி வருதுன்னா, சாதாரணமா எட்டு மணி நேர தூக்கம், பற்றுவதில்லை, இம்மாத்திரையால்...

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளி அனுப்பி, எல்லா வேலையும் முடித்து விட்டாலும், கண்ணில் தூக்கம் மிச்சம் இருக்கிறது. அதனால், மறுபடியும் தூங்கி விட்டேன். இப்போ மீண்டும் அதே அமுக்கான்.

என்ன ரீல் சுற்றுகிறேன் என்று நினைக்கிறீர்களா? இல்லைங்க, இன்னிக்கு உண்மையா நடந்ததுங்க. ஆழ்ந்த தூக்கம். திடீரென்று விழிப்பு. விழிப்பு, கண்களுக்கு இல்லை. நினைவலைகள் மட்டும் விழித்து கொண்டன. ஆனால், கைகளும் கால்களும் இயங்கவில்லை. யாரோ அமுத்தி பிடித்திருப்பது போல. எனக்கு ஒரே பயம். பராலிஸஸ் போல இருக்கே, என்னடா இது என்று குழப்பம். மீண்டும் அப்படியே தூங்கி விட்டேன்.

மீண்டும் சிறிது நேரம் கழித்து, அதே விழிப்பு நிலை. அதே அமுக்கான். ஆனா, கொஞ்சம் வேறு விதமாக. வயது முதிர்ந்தும், உயரத்தில் வளராத, கட்டில் உயரமே இருக்கும் ஒரு சிறுவன், கட்டில் ஓரமாக இருக்கும் என் இடது கையை இழுத்து பிடித்திருக்கிறான். அந்த அழுத்தத்தின் தாக்கத்தால், என்னால் உடல் முழுவதும் அசைக்க முடியவில்லை.

கையே இல்லாதது போல ஒரு ஃபீலிங். கண்கள் மூடித்தான் இருக்கு, ஆனாலும் நினைவு நன்றாக தெரிகிறது. வாயை அசைக்க முடியவில்லை.மனதுக்குள் ‘ஆயத்துல் குர்ஸி’ (இது போன்ற நேரங்களில் ஓதுவது) ஓதுகிறேன். ஓதி முடித்தும் சில நிமிடங்கள் உணர்வற்று தான் கிடந்தேன். பிறகு, என் முழு பலத்தையும் ஒன்று திரட்டி, ம்..ஹூம் இப்போதும் முடியவில்லை. கையை அழுத்தி இழுத்துப் பிடித்துக் கொண்டு அந்த சிறுவன் நின்று கொண்டே இருக்கிறான். வ்வ்வ்வேகமாக புரண்டேன். அவ்வளவு தான் அந்த கட்டு விட்டு விட்டது. கண் விழித்து பார்த்தேன். யாரும் இல்லை.

அப்போ எதேச்சையாக வீட்டுக்கு வந்த என்னவரிடம் சொன்னேன். அவர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. எப்போதும் ஒருவித கனவுலகிலேயே நான் இருப்பதால், அதை போல இதையும் நினைத்து விட்டார் போலிருக்கிறது.

அப்புறம் என்னடா இது, என்று இது குறித்து நெட்டில் தேடினேன். மனோ தத்துவ நிபுணர்கள், நம் தூக்கத்தை ஒரு சில பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள். இதில் பீட்டா நிலை என்பது, சாதாரண விழிப்பு நிலை. ஆல்ஃபா நிலை என்பது, நாம் ரிலாக்ஸாக, கையை காலை நீட்டி சோம்பலாக படுத்திருக்கிறோமே அது. இந்த நிலையில் நம் மூளையின் செயல்பாடு குறைவாக இருக்கும். தியானம் செய்யும் போது, நாம் இந்நிலையை தான் அடைகிறோம்.

அடுத்து தீட்டா நிலை என்பது, இங்கு தான் தூக்கம் ஆரம்பம் ஆகிறது. தீட்டா நிலையில் ஒருவர் தூங்கி, அதே நிலையில் எழுந்து விட்டால், ‘வெளிக்கண்ணு தான் முடியிருந்தது, ஆனால், உள்கண் மூடவில்லை’ என்பார்கள். தூக்கத்தை உணர்ந்திருந்தாலும், அதனால், தூங்கியது போன்ற திருப்தி கிடைக்காது! இந்த நிலையில் இருந்து, உடல் வேகம் குறைந்து மனவேகம் அதிகரிக்க ஆரம்பிக்கிறது.

அடுத்த நிலை ஆழ்ந்த தூக்கம். இதை டெல்ட்டா நிலை என்கிறார்கள். நம் மூளையின் செயல்பாடு, நம் கண்களின் செயல்பாடு, நம் உடலியக்கம் ஆகிய மூன்று விஷயங்களை வைத்து தான், இந்நிலைகளை கணக்கில் கொள்கிறார்கள். இந்த டெல்ட்டா நிலையில் தான் தூக்கத்தில் பேசுவது, நடப்பது போன்ற செயல்கள் நிகழ்கின்றன.

அடுத்ததாக சொல்வது ரெம் நிலையாகும். இது கொஞ்சம் சுவாரஸ்யமான நிலையாகும். அதாவது உள்கண் விழித்திருக்கும். ஆனால், உடலியக்கம் இருக்காது. நான் முன்பு சொன்னது போல், கைகால்கள், பராலிஸஸ் ஆகி, அதாவது செயலிழந்தது போல் ஆகி இருக்கும். ஆனால், விழிகள் முடியிருந்தாலும், அசையும். இந்நிலையில் தான் கனவுகள் தோன்றும்.

எதேச்சையாக ரெம் நிலையில் இருந்து எழுபவர், உடனே, தன் கண்ட கனவை விவரிப்பதைப் பார்க்கலாம். பொதுவாக, ஒருவருக்கு தூக்கம் படி படியாக துவங்கி, படி படியாக ரிவர்ஸில் வந்து முடிவடைகிறது.

டெல்ட்டா நிலையில் இருப்பவரை சுலபமாக எழுப்ப முடியாது. ஆனால், தீட்டா நிலையில் இருப்பவரை எழுப்பி விடலாம். அதனால், ஒரு மனிதர் குறிப்பிட்ட நேர தூக்கத்துக்கு பின், தீட்டா நிலைக்கு திரும்புகிறார், பின் ஆல்ஃபா நிலைக்கு வந்து, விழிப்புக்கு வருகிறார்.

பொதுவாக இது தான் நடக்கிறது, நாம் தூங்கும் போது...நான் இந்த ரெம் நிலையில் இருந்து தான் டெல்ட்டா மற்றும் தீட்டா நிலைக்கு வராமல், திடீரென்று விழித்திருக்க வேண்டும், அல்லது விழித்ததாக நினைத்திருக்கலாம். ஆனால், என் கையை அமுக்கி பிடித்திருந்த அந்த குட்டை சிறுவன் எங்கிருந்து வந்தான்?

-சுமஜ்லா.
.
.

18 comments:

Unknown said...

எனக்கு என் கல்லூரி நாட்களில் (U.G.) அடிக்கடி இதுபோல் ஏற்படும். சில நேரங்களில் பெரிதாக கத்தி இருக்கிறேன். இது மூச்சு சரி வர விட முடியாததால் ஏற்படும் ஒரு வகை உணர்வு. உள்ளுணர்வு அதை நம் எண்ணத்திற்கேற்ற ஆளாக வடிவமைத்துக் கொள்ளும்.
எனக்கு, குண்டான, பலம் பொருந்திய ஆள் நெஞ்சில் உட்கார்ந்திருப்பது போல அல்லது ஏறி மிதிப்பது போல தோன்றும்.
நல்ல காற்றோட்டமான இடத்திற்கு படுக்கையை மாற்றுங்கள். உங்கள் தொழுகை மற்ற காரியங்களை முழுமை படுத்துங்கள். படுப்பதற்கு முன் ஆயத்துல் குர்ஸீ ஓதிப் படுங்கள். அதன் பின் நிம்மதியான உறக்கம் வரும்.

அரங்கப்பெருமாள் said...

நானும் இதுபோல் கனவுகளில் சிக்கியதுண்டு. மாடு துரத்துவது போல இருக்கும் ஆனால் ஓடமுடியாது. அருகில் வரும்போது வேகமாக முயற்சிப்பது போல தோன்றி,தூக்கத்திலிருந்து எழுவேன். கனவைப் பற்றி பல ஆராய்ச்சி நடைபெறுகிறது.லேனா தமிழ்வாணன் இது பற்றியும் அதன் பலன் குறித்தும் ஒரு நூல் எழுதியுள்ளார்.

"நாம் அவருக்கு கனவுகளுக்கு பலன் கூறுவதையும் கற்றுக்கொடுத்தோம்;அல்லாஹ் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்(12:21)"

Jawahar said...

தூக்கத்தைத் தருகிற மாத்திரைகள் சில நேரம் steroid கலந்தவையாக இருக்கலாம்..அப்படிப்பட்ட மாத்திரைகள் REM தூக்கத்தில் hallucination களைத் தருவதற்கு வாய்ப்புண்டு.

Dr ப்ருனோ இதைப்படிக்க நேர்ந்தால் சரியாகச் சொல்வார்.

http://kgjawarlal.wordpress.com

Jaleela Kamal said...

//அடுத்து தீட்டா நிலை என்பது, இங்கு தான் தூக்கம் ஆரம்பம் ஆகிறது. தீட்டா நிலையில் ஒருவர் தூங்கி, அதே நிலையில் எழுந்து விட்டால், ‘வெளிக்கண்ணு தான் முடியிருந்தது, ஆனால், உள்கண் மூடவில்லை’ என்பார்கள். தூக்கத்தை உணர்ந்திருந்தாலும், அதனால், தூங்கியது போன்ற திருப்தி கிடைக்காது//

சுஹைனா எனக்கும் நீங்கள் சொல்வது போ அடிக்கடி ஆவதுண்டு.

யாரோ எழுந்திரிக்க விடாமல் அழுத்துவது போல் இருக்கும் , உஷாராக இருப்போம் ஆனால் எழுந்திருக்க முடியாது,.

ரொம்ப நேரம் போராட்டத்துக்கு பிறகு நாமே சுதாரித்து கொன்டு எழுந்திருப்பது போல் இருக்கும்.

நான் எனக்கு மட்டும் தான் இப்படி என்று நினைத்து கொள்வது.

முன்பு அதேயே நினைத்து தூக்கமே இல்லையே என்று இருக்கும். ஆனால் காலை எழுந்ததும் வேலையெல்லாம் சுறு சுறுப்பாக நடக்கும், ஆனால் மனம் சோம்பலாகவே இருக்கும்.

Jaleela Kamal said...

இதுக்கு தான் உடம்பு சொல்வதை நாம் கேட்க கூடாது நாம சொல்வதை தான் நம் உடம்பும், மனசும் கேட்கனும். இப்படி இருந்தால் எல்லாம் லேசாகிடும்.
அப்படின்னு என் கிரான்மா சொல்வார்கள்.

எல்லாத்துக்குமே அருமருந்து 'ஆயத்துல் குர்ஸி’ தான்

SUFFIX said...

பல பேர் இப்படி சொலவதை கேட்டு இருக்கின்றேன். இப்போது தங்களிடமிருந்து. தைரியமாக இருங்கள்!!

SUMAZLA/சுமஜ்லா said...

அட, எனக்குத்தான் இப்படி என்றால், பலருக்கு ஏற்பட்டிருக்குதே! ஜஸ்ட் ஒரு ஆறுதல்...

ஆனால், அந்த நேரத்தில் பயமாக இருந்தாலும், நான் தைரியசாலிதாங்க!

ஜலீலா நீங்கள் சொல்வது போல, தூங்கினாலும், தூங்காதது போன்ற சோம்பலும், சில நிமிடங்களே தூங்கினாலும், வெகு நேரம் தூங்கியது போன்ற திருப்தியும் இதனால் தான் ஏற்படுகிறது போலும்!

நிகழ்காலத்தில்... said...

உங்கள நீங்களே பார்த்துக்கிட்ட நிலைன்னு நினைக்கிறேன்.,

வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

எனக்கும் அப்பப்ப இதுமாதிரி நடந்திருக்கு

SUMAZLA/சுமஜ்லா said...

கட்டை குட்டை சிறுவனாக நானா? ரொம்ப வேடிக்கையாக எழுதியிருக்கிறீர்!

ஸ்டார்ஜன், பார்த்தால், இது சாதாரண விஷயம் போல் உள்ளதே?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இதை நம்புவதா... வேண்டாமா... தெரியவில்லை.

ஆனால் இதைப் போன்று அடிக்கடி தனக்கு நடப்பதாக
பல ஆண்டுகளுக்கு முன்பே எனது உறவினர் ஒருவர்
கூறியுள்ளார்.

SUMAZLA/சுமஜ்லா said...

நம்பித்தான் ஆக வேண்டும். காரணம் அது ஜின் வர்க்கத்தின் செயலாகக் கூட இருக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

எனக்கும் வந்திச்சி

இப்பல்லாம் வாறதில்லை ...

சீமான்கனி said...

எனக்கு இதுபோல அமுக்கான் அனுபவம் எல்லாம் இல்லை ஆனால் பள்ளியில் படிக்கும் பொது லிவுக்கு பாட்டி விட்டுக்கு போவோம் ..
தினமும் காலை கண்முழிச்தும் என் அக்கா நைட்டெல்லாம் ஏதோ பேய் என்ன அமுக்குசுனு சொல்லுவாங்க...நன் அன்னைக்கு இருந்து சரியவே தூங்கமாட்டேன்...
எப்படா விட்டுக்கு போவோம்னு இருக்கும்....

SUMAZLA/சுமஜ்லா said...

//நன் அன்னைக்கு இருந்து சரியவே தூங்கமாட்டேன்//

ஹை! என்ன மாதிரியே பயந்து நடுங்கி இருக்கீங்க?! :-)

வால்பையன் said...

:(

"உழவன்" "Uzhavan" said...

உறக்கத்தின் பல நிலைகளைத் தெரிந்துகொண்டோம்.
இப்படியெல்லாம் பயம் காட்டாதீங்க :-)

SUMAZLA/சுமஜ்லா said...

இதெற்கெல்லாம் பயப்படலாமா வீரரே?!