Wednesday, September 2, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 21

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

“குடும்பம் ஒரு கதம்பமே,
அடுக்கடுக்காய் துயரமே!
தடுக்கமுடியா மனிதனுக்கு,
இடுக்கண்ணோடு வரும் இன்பமே!!

மர்ஜியும் ஆப்பியும் கொஞ்சம் கொஞ்சமாக பெற்றவளை மறந்து, நன்னீமாவுடன் ஐக்கியமாகி விட்டார்கள். பாத்திமாவையும் அம்மா என்றே அழைத்தார்கள். இருவரும் படிப்பில் படு சுட்டியாக திகழ்ந்தார்கள். ஆனால், ஆப்பி மர்ஜியை விட கொஞ்சம் கூடுதல் அறிவோடு இருந்தாள். பாஜிலாவுக்கு அம்மா என்றால் அது பாத்திமா தான். வேறொன்றும் தெரியாது.

சாதிக்கலி திருமணத்துக்கு எல்லாரும் போய் வந்தார்கள். மணப்பெண் பர்வீன் நல்ல களையான முகம். நல்ல குணம். உறவென்று சொல்ல முடியாது. அசல் தான்.

பாத்திமா ஒரு நிமிடம், தன் பெறாத மகளை அந்த இடத்தில் வைத்து நினைத்து பார்த்தாள். பெருமூச்சு தான் வந்தது. சொல்லுவாங்க வாழற புள்ள கெடற வீட்டு போகாது, கெடற புள்ள வாழற வீட்டு போகாதுனு…

சாதிக்கலிக்கு அப்பாவும் மவுத்தான போனதனால், இப்ப நன்னீமா முத்தம்மா பராமரிப்புல தான். அம்மா அப்பா எல்லாமே நன்னீமா தான். சாதிக்கலி தம்பியும் அவங்க கூட…

ஆனால், சாதிக்கலியின் அப்பா, கச்சாமா எடுப்பு பிள்ளை என்பதால் தான், குலம் கோத்திரம் தெரியாதவளை மணம் முடிக்க வேண்டாம் என்று இறப்புக்கு முன்பு சொல்லியிருந்தார் என்று பின்னர் தெரிந்தது!

அதோடு, சைதாவின் காதல் அஹமதோடு நல்ல விதமாக வளர்ந்து கொண்டிருந்தது. இருவருக்குள்ளும் நல்ல மனப்பொருத்தம் இருந்தது. பெரியவங்களும் பேசி வைத்திருந்தனர். அதனால், ரொம்ப சுலபமாக போய் விட்டது.

ஒரு நாள் வழக்கம் போல, அஹமது, புது உண்டியல் வாங்கி எல்லார்கிட்டயும் வசூல் பண்ண, அதில் சைதா, ஒரு ருவாய் தாளில், இருவரின் முதலெழுத்தையும் இணைத்து, மைப்பென்சிலில் எழுதி போட, அதிலிருந்து இருவருக்கிடையேயும் பிரிக்க முடியாத பந்தமாகி விட்டது.

அஹமது படித்து கொண்டிருந்தது, சென்னையில்… அதனால் எப்போதாவது தான் வந்து செல்வான், ஊருக்கு! வரும் போதெல்லாம் சைதாவுக்கென்று எதாவது வாங்கி வருவான். தன் தாயிடம் கொடுத்து சைதாவிடம் கொடுக்க செய்வான். சைதாவின் அம்மாவும் அஹமதின் அம்மாவும் சகோதரிகளாக இருந்ததால், இருவருக்கும் ரொம்ப வசதி!

அப்போ தான், அஹமதின் தந்தை காலமாகி இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது. ஒரு நாள் அஹமதின் அம்மா சல்மாவும் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தார், தலை வலியென்று…

எல்லா டாக்டர்களிடமும் காண்பித்து, மூளையில் கட்டி இருப்பதை உறுதி செய்தார்கள். இந்த ஊரில் அதற்கான மருத்துவம் இல்லாததால், வேலூர் சென்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார்கள்.

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. சல்மா வெளியே கொண்டு வரப்பட்டாள்.

“பீவி கையை தூக்குங்கள்” டாக்டர் சொல்ல, கையை தூக்கினாள்.

அவ்வளவு தான், பெட்டில் படுக்க வைக்க தூக்கிய போது, உயிர் உடலில் இல்லை....

ஊருக்கு கொண்டு வந்து இறுதி சடங்கு செய்தார்கள். எப்போதும் அம்மாவின் செல்லமான அஹமது கதறி கதறி அழுகிறான். ஆறுதல் சொல்லி தேற்ற கூட ஆளில்லாத அளவுக்கு எல்லாரும் கதறி கதறி அழுகிறார்கள். அஹமதுவின் கூட பிறந்த ஆறு பசங்களில், நால்வருக்கு மட்டுமே திருமணம் ஆகி இருந்தது, அப்போது!

அஹமதுக்கு அம்மா இல்லாத தனிமை கொடுமையாக இருந்தது. அதனால், தன் அண்ணன் ரசீதுவின் திருமணத்தோடு தன் திருமணத்தையும் சேர்த்தே செய்து விட வேண்டும் என்று விரும்பினான்.

சொத்து சுகத்துக்கும் குறைச்சல் இல்லை. வியாபாரமும் நன்றாகவே நடந்தது. கார், வீடு, வாசல் என்று எல்லா வசதியும் இருந்தது. அதனால், இரு திருமணங்களையும் ஒன்றாக நடத்திவிட தீர்மானித்து, சல்மாவின் ஆறாம் மாத பாத்திஹா முடிந்த கையோடு, இருவருக்கும் நன்னீமாவாகிய முத்தம்மா முன் நின்று நடத்தினாள்.

அஹமதுவின் வாழ்க்கையில் சைதா நுழைந்த போது, அஹமதுக்கு இருபத்திரெண்டு வயது, சைதாவுக்கு பதினைந்து! இளம் பருவம் என்றாலும், இருவருக்குள்ளும் ஆழமான காதல் ஊடுருவி இருந்தது. திருமணத்துக்கு பின்னும் அது தொடர, இருவரும் காதல் வானில் சிறகடித்து பறந்தனர்.

தன் தங்கை பிள்ளைகளின் திருமணத்தை நல்லபடி கண்டு களித்த மீரான் சாயபு, அதன் பின் உடல் நலம் குன்ற ஆரம்பித்தார்….

அடிக்கடி நோய்வாய்பட்டு, தெம்பிழந்து போனார். அவருக்கு எப்போதும், தன் பேரப்பிள்ளைகள் மேல் கவலை. தாயில்லாப்பிள்ளைகளை நல்லபடி வளர்க்க வேண்டும் என்பதோடு, கச்சாமாவுக்கு அவர் தந்த துன்பங்கள் எல்லாம் உறுத்தி கொண்டே இருந்தது.

ஒரு நாள் வாதம் மீண்டும் கடுமையாக தாக்க, நினைவிழந்தவர், பின் கண் விழிக்கவே இல்லை. அடுத்தடுத்த இறப்புகளால், நிலை குலைந்து போனாள் பாத்திமா….

வளர்ப்பு மகளின் குழந்தைகளுக்கு தாயுமானவள், தற்போது தந்தையுமாகிப் போனாள்.

(வளரும்)



-சுமஜ்லா.

9 comments:

கவி அழகன் said...

தினம் தினம் ஒரு தரிசன்ம கிடைக்குமா ? .வாழ்த்துக்கள்.அழகு.
http://kavikilavan.blogspot.com

சீமான்கனி said...

ஐ..நான்தான் பாஸ்ட்...

சீமான்கனி said...

ஐ..நான்தான் பாஸ்ட்...
நம்ம எதிர்வீட்டு கதைய பாக்குற மாதிரியே இருக்கு அக்கா....
பெயர்கள் எல்லாம் ரெம்ப வித்த்யசமா இருக்கு....
அழகு அருமை அக்கா.....

SUMAZLA/சுமஜ்லா said...

சீமான்கனி, இது உங்களுக்கு தெரியாதா? இதில் வரும் சைதா தான் எங்க அம்மா. அஹமது எங்க அப்பா. இது எம் உறவுகளின் ரியல் ஸ்டோரி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இ'ந்த வாரம் திருமணம் மற்றும்
இ'றப்பு என்ற ரீதியில் கதையில்
இ'ன்பமும் துன்பமும் கலந்து
இ'ருந்தது.

SUMAZLA/சுமஜ்லா said...

'இ’க்கள் நிறைய இருக்க காரணம், பொறுமை இல்லாமல் வேக வேகமாக எழுதினேன், கதை அதான் ஸ்பீடா ஓடிடுச்சு! (முன்பே எழுதி வைக்க மறந்துவிட்டேன்)

Jaleela Kamal said...

நிஜாம் அண்ண சொன்ன மாதிரி இன்பம் துன்பம் எல்லாம் கலந்து வந்துள்ளது,

தொடருங்கள்.

Anonymous said...

சாயபு வீட்டு சரித்திரம்-23 ஏன் இன்று வெளி வரவில்லை. உங்கள் கம்பியுட்டர் ரிப்பேரா? அல்லது உங்களுக்கு நேரம்கிடைக்கவில்லையா?

SUMAZLA/சுமஜ்லா said...

என் கம்ப்யூட்டர் ப்ராப்ளம். தவிர்க்க முடியாத காரணம். பொறுத்துக் கொள்ளுங்கள்.